
புரோ கபடி
புரோ கபடி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது புரோ கபடி லீ்க் என்பது அதன் பெயர். ஐபிஎல் போல இது கபடிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

எட்டு அணிகள்
இந்த பிகேஎல்லில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதை பிரபல விளையாட்டு விமர்சகரும், வர்னணையாளரும், மஷால் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநருமான சாரு சர்மா நிர்வகிக்கிறார்.

60 போட்டிகள்
இந்த எட்டு அணிகளும் 60 போட்டிகளில் ஆடவுள்ளன. இதில் முதல் நான்கு இடங்களைப் பெறும் நான்கு அணிகள் பெங்களூர் கண்டீரவா மைதானத்தில் ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெறும் அரை இறுதிப் போட்டியில் மோதும்.

ஏலம் விட்டு வீரர்கள் சேர்ப்பு
இந்த எட்டு அணிகளுக்கான வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். இந்திய கபடி அணியின் கேப்டன் ராகேஷ் குமார்தான் அதிகபட்சமாக ரூ. 12.80 லட்சத்துக்கு ஏலத்தி்ல எடுக்கப்பட்டார். இந்திய வீரர்கள் தவிர பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், ஈரான், ஜப்பான், இங்கிலாந்து, இந்தோனேசியா, தென் கொரியா, ஓமன், தைவான், கென்யா, துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தும் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அணிகள் விவரம்
இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகள் விவரம் - யுனைட்டெட் மும்பை, பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பல்தான், பாட்னா பைரேட்ஸ்.

பிரபல வீரர்கள் ஆதரவு
இந்த நிலையில் கபடியை நாட்டில் மேலும் பிரபலப்படுத்தும் நேரம் வந்து விட்டதாக பிரபல விளையாட்டு வீரர்கள் கூறியுள்ளனர்.

அசோக் திண்டா
பிரபல கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா கூறுகையில், எனக்குக் கபடி பிடிக்கும். அது விறுவிறுப்பான விளையாட்டு. கல்லூரி அளவில் நான் விளையாடியுள்ளேன். சுவாரஸ்யமான விளையாட்டு இது. இந்தியாவில் அதைப் பிரபலப்படுத்தினால் நல்லது என்றார்.

பைசுங் பூதியா
முன்னாள் இந்திய கால்பந்து அணி கேப்டன் பைசுங் பூதியா கூறுகையில், கபடியை பிரபலப்படுத்துவதன் மூலம் அந்த விளையாட்டையும், அதன் வீரர்களையும் பிரபலப்படுத்த முடியும். கபடியை நாம் ஊக்குவிக்க வேண்டும். அது நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளக் கூடிய விளையாட்டாகும். ஐபிஎல் போல இதை ஊக்குவிக்க முன்வந்திருப்பது நல்லது. நல்ல அருமையான, சுவாரஸ்யமான விளையாட்டு கபடி. பிகேஎல்லின் வெற்றி முக்கியமானது, அது வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.

எல்லாஞ்சரி தமிழ்நாட்டைக் காணோமே
பிகேஎல் ஆரம்பித்ததெல்லாம் சரி.. ஆனால் தமிழகத்துக் கிராமங்களில் இன்றளவும் வீர விளையாட்டு போல கருதி வாலிபர்கள் விளையாடி வரும் கபடிக்கு, இந்த பி.கே.எல்லில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லையே.. தமிழகத்தின் பெயரில் அணி கூட ஏற்படுத்தவில்லையே.. என்ன காரணம் சர்மா...?


Click it and Unblock the Notifications











