மும்பை : புரோ கபடி 11 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்தில் சுமார் 500 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஏலத்தில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு வீரர்களுக்கும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் 18 வீரர்களையும், அதிகபட்சமாக 25 வீரர்களையும் வைத்துக் கொள்ள முடியும். மொத்தமாக இதுவரை 88 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ள நிலையில் 212 இடங்களுக்கான வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒவ்வொரு அணியும் ஐந்து கோடி ரூபாய் வரை வீரர்களை ஏலத்தில் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பல அணிகள் பல வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருப்பதால் அதற்கு ஏற்ப அவர்களின் கையிருப்பு தொகை இருக்கும். புரோ கபடி ஏலத்தில் மொத்தம் வீரர்கள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிரிவு ஏ வில் இருக்கும் வீரர்களின் அடிப்படை விலை 30 லட்சம் ரூபாயாகவும், பி பிரிவில் இருக்கும் வீரர்களின் அடிப்படை விலை 20 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சி பிரிவில் இருக்கும் வீரர்களின் விலை 13 லட்சம் ரூபாயாகவும், டி பிரிவில் இருக்கும் வீரர்களின் விலை ₹9 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வீரர்கள் ஆல்ரவுண்டர், ரைடர்ஸ், டிஃபெண்டர் என்ற நிலையில் ஏலத்தில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்திருப்பார்கள். இதேபோன்று ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படும் ஆர் டி எம் கார்டு போல் இங்கு எஃப் பி எம் என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணிகளும் மூன்று fbm கார்டுகளை பயன்படுத்தலாம்.
அதாவது ஏற்கனவே தங்களுக்கு விளையாடிய வீரர்களை வேறு அணிகள் வாங்கும் போது அந்த விலையை கொடுத்து பழைய அணியே மீண்டும் குறிப்பிட்ட வீரர்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த புரோ கபடி ஏலம் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸிலும் ஆன்லைனில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரிலும் வரும் ஆகஸ்ட் 15,16 தேதிகளில் பார்க்கலாம்.