மும்பை : புரோ கபடி 11வது சீசனுக்கான ஏலம் மும்பையில் இன்று தொடங்கியது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் 12 அணிகள் ஏற்கனவே 88 வீரர்களை தக்கவைத்து கொண்ட நிலையில் 212 இடங்களுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு அணியும் ஐந்து கோடி ரூபாய் வரை ஏலத்தில் செலவு செய்யலாம். ஒவ்வொரு அணியும் 18 வீரர்கள் முதல் 25 வீரர்கள் வரை அணியில் வைத்துக் கொள்ளலாம். இந்த நிலையில் ஏலத்தின் முதல் நாளில் சச்சின் என்ற வீரரை தமிழ் தலைவாஸ் அணி 2 கோடியே 15 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.

இதன் மூலம் புரோ கபடி வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்திற்கு சென்ற இரண்டாவது வீரர் என்ற பெயரை அவர் பெற்றிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் கடந்த சீசனில் பாட்னா அணிக்காக விளையாடி அரையிறுதி வரை கொண்டு சென்றார். முதலில் சச்சினுக்கு உபி அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மற்றும் குஜராத் அணியும் போட்டி போட்டது.
இந்த பந்தயத்தில் கடைசியாக தான் இணைந்த தமிழ் தலைவாஸ் அவரை 2 கோடியே 15 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இதேபோன்று ஈரானைச் சேர்ந்த முகமது ரைசா என்ற வீரருக்கு 2 கோடியே ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து ஹரியானா அணி வாங்கியிருக்கிறது. மற்றொரு ஈரான் வீரர் பெசலை பெங்கால் அணி 50 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.
இதேபோன்று பவன் செரவாத்தை ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய்க்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணி வாங்கியிருக்கிறது. மணிந்தர் சிங்கை ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் கொடுத்து பெங்கால் வாரியர்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சுனில் குமாரை மும்பை அணி ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் கொடுத்து மும்பை அணியும், பாரத் ஹூடாவை ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கொடுத்து உபி அணியும் ஏலத்தில் தட்டி தூக்கி இருக்கிறது.ஏலத்தில் இரண்டாவது நாள் வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெறும்.