ஐதராபாத்: 11வது சீசனுக்கான ப்ரோ கபடி தொடரின் 2வது போட்டியில் மும்பை அணியை 36-28 என்ற கணக்கில் டெல்லி அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. டெல்லி அணியின் நட்சத்திர வீரர் நவீன் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவுட் ஆஃப் சிலபஸாக ஆஷு மாலிக் 10 புள்ளிகள் பெற்று அசத்தியுள்ளார்.
11வது சீசனுக்கான ப்ரோ கபடி தொடரின் முதல் போட்டியில் பெங்களூர் புல்ஸ் அணியை 37-29 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி அபார வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து 2வது போட்டியில் டபாங் டெல்லியை எதிர்த்து யு-மும்பா அணி களமிறங்கியது. ப்ரோ கபடி வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 22 போட்டிகளில் மோதியுள்ளன.

அதில் 12 போட்டிகளில் யு-மும்பா அணியும், 9 போட்டிகளில் டெல்லி அணியும் வென்றுள்ளன. இந்த நிலையில் 11வது சீசனின் 2வது போட்டியில் மீண்டும் இந்த இரு அணிகள் களமிறங்கின. தொடக்கம் முதலே டெல்லி அணி முன்னிலை கொண்டிருந்தது. ரெய்ட் புள்ளிகள் மட்டுமல்லாமல், சூப்பர் டேக்குள் மற்றும் டூ ஆர் டை ரெய்டுகள் மூலமாக புள்ளிகளை பெற்றது.
அதேபோல் மும்பை அணியின் டேக்குள் மோசமாக இருந்தது. இதனை பயன்படுத்தி டெல்லி அணியின் ஆஷு மாலிக் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தார். டெல்லி அணியின் நவீன் எக்ஸ்பிரஸ் அசத்தலாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அவுட் ஆஃப் சிலபஸாக ஆஷு மாலிக் அடுத்தடுத்து 10 புள்ளிகளை பெற்று மிரட்டினார்.
இதனால் இறுதியாக டெல்லி அணி 36-28 என்ற கணக்கில் மும்பை அணி அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. மும்பை அணி தரப்பில் அஜித் சவான் சிறப்பாக விளையாடி 10 புள்ளிகளை பெற்றாலும், மற்ற வீரர்களின் பங்களிப்பு குறைவாக இருந்தது அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 8வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற டெல்லி அணி, இம்முறை வெற்றியுடன் தொடங்கியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.