நொய்டா: ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 36-29 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி அடையும் 6வது தோல்வி என்பதால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்த்து தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது. 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ் அணி, நேற்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி கம்பேக் கொடுத்தது. இதனால் ஃபார்மை தொடருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அதற்கேற்ப முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. 14வது நிமிடத்திலேயே ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை ஆல் அவுட் செய்து தமிழ் தலைவாஸ் அணி 13-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 17-14 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையை தக்க வைத்தது.
பின்னர் நடந்த 2ஆம் பாதி ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வீரர்கள் தீவிரமாக செயல்பட்டனர். ரெய்டு புள்ளிகளை எடுக்காவிட்டாலும் எளிதான போனஸ் புள்ளிகளை எடுத்து கொண்டே இருந்தனர். இதனால் ஆட்டம் முடிவதற்கு 12 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், இரு அணிகளும் தலா 21-21 என்று சரிக்கு சமமாக போட்டி போட்டனர்.
தொடர்ந்து கடைசி 4 நிமிடத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 29-28 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றதால், பரபரப்பு உச்சத்திற்கு சென்றது. இதன்பின் ஹரியானா அணி வீரர்கள் தெளிவாக ரெய்டில் புள்ளிகளை எடுக்க முயற்சிக்காமல், நேரத்தை கடக்க முயற்சித்தனர். அதேபோல் தமிழ் தலைவாஸ் அணி ரெய்டில் புள்ளிகள் எடுக்க முயற்சித்து புள்ளிகளை கொடுத்து வந்தது.
தொடர்ந்து கடைசி ஒன்றரை நிமிடம் இருந்த போது டூ ஆர் டை ரெய்டில் ஹரியானா அணியின் வினய் 2 புள்ளிகளை எடுத்து முன்னிலை பெற்றார். இதனால் ஆட்டம் 32-28 என்ற நிலைக்கு ஆட்டம் சென்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் தலைவாஸ் அணி ஆல் அவுட்டானதால், ஹரியானா அணியின் வெற்றி உறுதியானது. இதனால் ஆட்டம் நேர முடிவில் 36-29 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஒரேயொரு போனஸ் புள்ளியை மட்டுமே பெற்றது தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.