ஐதராபாத்: புரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 44-29 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியுள்ளதால், இம்முறை தமிழ் தலைவாஸ் பிளே ஆஃப் சுற்றுக்கும் செல்லும் என்ற ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
11வது சீசனுக்கான புரோ கபடி லீக் தொடரின் 3வது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்த்து தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது. நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் அணியை 37 - 29 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் வீழ்த்தியது. இந்த நிலையில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்த்து சொந்த மண்ணில் முதல் போட்டியில் தமிழ் தலைவாச் அணி மோதியது.

இம்முறை நட்சத்திர வீரரான சச்சினை ரூ.2.15 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அதேபோல் 4 தமிழக வீரர்களையும் வாங்கியது. இந்த நிலையில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. நரேந்தர் மற்றும் சச்சின் இணைந்து ரெய்டில் பாய்ண்ட்-களை குவிக்க, இன்னொரு பக்கம் டேக்குளிலும் அசத்தினர்.
இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 20 புள்ளிகளும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 17 புள்ளிகளும் பெற்றிருந்தன. பின்னர் நடந்த 2வது பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் விஜய் மாலிக் சைலண்டாக புள்ளிகளை எடுக்க, ஆட்டம் விறுவிறுப்பானது. ஆனால் நட்சத்திர வீரரான சச்சின் அடுத்தடுத்து ரெய்டில் புள்ளிகளை குவித்தார். இதனால் தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஆல் அவுட்டாகியது.
இதனால் போட்டி முடிவதற்கு 10 நிமிடங்கள் இருக்கும் போது தமிழ் தலைவாஸ் அணி 31-21 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான பவன் ஷெராவத் மற்றும் விஜய் மாலிக் இருவரும் தமிழ் தலைவாஸ் அணி டேக்குள் செய்து அசத்தியது. அதேபோல் நேரத்தை கடத்தும் பணியிலும் மும்முரமாக இருந்தது.
பின்னர் 3வது முறையாக தெலுங்கு டைட்டன்ஸ் அணியை ஆல் அவுட் செய்ய, தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. சிறப்பாக ஆடிய சச்சின் முதல் போட்டியிலேயே சூப்பர் 10 புள்ளிகளை பெற்று அசத்தினார். இறுதியாக ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 44-29 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது.