புனே: புரோ கபடி லீக் தொடரில் குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணியை 40-27 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. அடுத்தடுத்து 2 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்திருந்த சூழலில், இந்தப் போட்டியில் சிறப்பான கம்பேக்கை கொடுத்து அசத்தியுள்ளது.
புரோ கபடி லீக் தொடரின் 8வது வாரப் போட்டிகள் புனேவில் நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியது. கடந்த 2 போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்திருந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப டாஸ் வென்ற தமிழ் தலைவாஸ் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டம் தொடங்கிய 16வது நிமிடத்திலேயே குஜராத் அணியை ஆல் அவுட் செய்து தமிழ் தலைவாஸ் அணி அசத்தியது. தமிழ் தலைவாஸ் அணியின் மொயின் அசத்தலாக ரெய்டுக்கு சென்று புள்ளிகளை குவித்தார். இன்னொரு பக்கம் ஹிமான்ஷு மற்றும் சவுரப் இருவரும் டேக்கிள் செய்து புள்ளிகளை பெற்றனர். இதனால் முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 19-8 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து 2வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் வீரர் நிதேஷ் குமார் குஜராத் அணியின் ரோகன் சிங்கின் கழுத்தை பிடித்ததாக கூறி நடுவர்கள் அவரை 2 நிமிடங்கள் இடைநீக்கம் செய்தனர். இருந்தாலும், 30வது நிமிடத்தில் 2வது முறையாக குஜராத் அணியை ஆல் அவுட் செய்து தமிழ் தலைவாஸ் மிரட்டியது. தமிழ் தலைவாஸ் வீரர்களின் ஆட்டத்தை கொஞ்சம் கூட குஜராத் அணியால் சமாளிக்க முடியவில்லை.
இறுதியாக 40-27 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றியை பெற்றது. மொத்தமாக 23 புள்ளிகளை ரெய்டு மூலமாகவும், 13 புள்ளிகளை டேக்கிள் மூலமாக தமிழ் தலைவாஸ் அணி கைப்பற்றியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும், தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்திலேயே இருக்கிறது.
இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 6 வெற்றி, ஒரு டிரா மற்றும் 9 தோல்வியுடன் 38 புள்ளிகள் பெற்று 9வது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 6 மட்டுமே மீதமிருக்கும் சூழலில், அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது குறித்து கனவு காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.