நொய்டா: புரோ கபடி லீக் தொடரின் 5வது வாரத்தில் நடந்து வரும் லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை 46-31 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தி அசத்தல் கம்பேக்கை கொடுத்துள்ளது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
புரோ கபடி லீக் தொடரின் 5வது வாரத்தில் நடந்து வரும் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இன்றைய ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்த்து தமிழ் தலைவாஸ் அணி விளையாடியது. தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரை கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் மோசமான தோல்வியை பெற்றது. இதனால் புள்ளிப் பட்டியலிலும் சரிவை சந்தித்தது.

கடந்த சீசனை போல் தமிழ் தலைவாஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது சிரமம் என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் நட்சத்திர வீரரான சச்சினை மாற்று வீரராக உட்கார வைத்துவிட்டு விஷால் சாஹல் மற்றும் அமிர்ஹொசைனுடன் களம் புகுந்தது. தொடக்கம் முதலே இரு அணிகளும் சரிக்கு சமமான போட்டியிட்டதால், ஆட்டத்தில் பரபரப்பு எகிறியது.
ஆனால் முதல் பாதி ஆட்டத்திலேயே பெங்கால் வாரியர்ஸ் அணியை ஆல் அவுட் செய்ததன் மூலமாக தமிழ் தலைவாஸ் அணி 18-16 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டத்திற்கு பின் தமிழ் தலைவாஸ் அணியின் ஆட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்றது. ஒவ்வொரு நிமிடத்திலும் ரெய்டு, டிஃபென்ஸ் என்று புள்ளிகளை குவிக்க தொடங்கியது.
இதன் காரணமாக தமிழ் தலைவாஸ் அணி இறுதியாக 46-31 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் மட்டும் பெங்கால் வாரியர்ஸ் அணியை 6 முறை ஆல் அவுட் செய்து அசத்தியுள்ளனர். அதேபோல் 20 ரெய்டு புள்ளிகள், 19 டேக்குள் புள்ளிகள் என்று இரண்டிலும் மிரட்டி இருக்கின்றனர். அதிகபட்சமாக விஷால் சாஹல் 12 புள்ளிகளை பெற்று அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலமாக தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் புள்ளிப் பட்டியலிலும் தமிழ் தலைவாஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்வி, ஒரு டிராவுடன் 27 புள்ளிகள் பெற்று 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாளை புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்த்து தமிழ் தலைவாஸ் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.