விசாகப்பட்டினம்: புரோ கபடி லீக் தொடரில் பெங்களூர் புல்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பெற்று இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற முதல் போட்டியில்,பாட்னா பைரேட்ஸை 38-30 என்ற கணக்கில் தோற்கடித்தது. ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த புல்ஸ், அலிரேசா மிர்சையனின் 10 புள்ளிகள் மற்றும் ஆஷிசின் 8 புள்ளிகள் காரணமாக மிகச்சிறந்த கம்பேக்கை கொடுத்தது.
போட்டி ஆரம்பத்தில் இரு அணிகளும் 4-4 என்று சமநிலையில் துவங்கின. ஆயன் தலைமையிலான பாட்னா, முதல் பாதியின் நடுவில் 12-6 என்று முன்னிலை பெற்றது. இதில் ஆயன் 5 புள்ளிகளைப் பெற்றார். இருப்பினும், புல்ஸ் பின்வாங்க மறுத்து, இறுதியில் எதிரணியை ஆல் அவுட்டாக்கியது. இதனால் இடைவேளையில் 19-15 என்று முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில், பாட்னா வித்தியாசத்தை இரண்டு புள்ளிகளாகக் குறைத்தாலும், பெங்களூருவின் ரெய்டர்கள் கட்டுகோப்பாக செயல்பட்டார்கள். அலிரேசா முன்னணியில் நின்று, தீபக் மற்றும் மற்றவர்களின் சரியான பங்களிப்புடன், புல்ஸ் இறுதி நிமிடங்களில் முன்னிலை பெற்றது. இந்த வெற்றி பெங்களூருவுக்கு சீசனின் முதல் புள்ளிகளைப் பெற்றுத் தந்தது.
தற்போது 18 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் புனே அணி ஆறு புள்ளிகள் பெற்றிருக்கிறது. விளையாடி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி ஒரு தோல்வி உடன் முதலிடத்தில் இருக்கின்றது. இரண்டாவது இடத்தில் மும்பை அணி 6 புள்ளிகள் உடன் உள்ளது. டெல்லி அணி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
உபி அணி நான்கு புள்ளிகள் உடன் நான்காவது இடத்திலும் உள்ளது. ஹரியானா அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், பெங்கால் வாரியர் அணி 2 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. ஜெய்ப்பூர் அணி 2 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் இரண்டு புள்ளிகள் எட்டாவது இடத்திலும், தமிழ் தலைவாஸ் 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிக்கு மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.