சென்னை: புரோ கபடி லீக் 5வது சீசன் ஆட்டங்கள் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு நகரங்களில் விளையாடி வரும் இந்தப் போட்டிகள், அடுத்ததாக, சென்னையில் நாளை மறுநாள் (29ம் தேதி) துவங்குகிறது.
புரோ கபடி லீக் 5வது சீசன் ஆட்டம், ஜூலை 28ல் துவங்கி நடந்து வருகிறது. மொத்தம், 12 அணிகள், 113 போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் தமிழ் தலைவாஸ் உள்பட, நான்கு புதிய அணிகள் முதல் முறையாக களமிறங்கியுள்ளன.

12 அணிகளும், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய பிரிவுக்குள் 15 போட்டிகளும், எதிர் பிரிவு அணிகளுடன் 7 போட்டிகளிலும் விளையாடும். அதன்பிறகு பிளே ஆப் சுற்று நடக்கும். மொத்தம் 13 வாரங்கள் நடக்கும் இந்த சீசனில், கடைசி கட்ட லீக் போட்டிகள் நடக்கின்றன.
இந்த சீசனின் 100வது போட்டி, சென்னையில் நடக்க உள்ளது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தம், 11 போட்டிகள் சென்னையில் நடக்கின்றன. இதில் 6 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி பங்கேற்கிறது.
தமிழ் தலைவாஸ் அணி விளையாடும் போட்டிகள்:
செப். 29, இரவு 8 மணி புனேரி பல்தான்.
செப். 30, இரவு 9 மணி ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ்.
அக். 1, இரவு 9 மணி யு மும்பா,
அக்., 3, இரவு 9, தெலுகு டைட்டன்ஸ்.
அக்., 4, இரவு 9, யு.பி.யோத்தா.
அக். 5, இரவு 8 , பெங்களூரு புல்ஸ்