விசாகப்பட்டினம்: 2025 புரோ கபடி லீக் (PKL) தொடரின் நேற்றைய ஆட்டம், ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைப்பதாக அமைந்தது. மேலும், புரோ கபடி வரலாற்றின் முதல் கோல்டன் ரெய்டு நிகழ்வும் நடந்தது. விசாகப்பட்டினத்தில் உள்ள விஸ்வநாத் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தபாங் டெல்லி கே.சி. மற்றும் புனேரி பல்தான் அணிகள் மோதின.
கடைசி வினாடி வரை அனல் பறந்த இந்த ஆட்டம், கோல்டன் ரெய்டில் முடிவுக்கு வந்தது. அதில், தபாங் டெல்லி அணியின் கேப்டன் ஆஷு மாலிக் வரலாற்றுச் சிறப்புமிக்க ரெய்டு மூலம் தனது அணிக்கு ஒரு மறக்க முடியாத வெற்றியைத் தேடித் தந்தார்.

இந்த சீசனில் சூப்பர் ஃபார்மில் இருக்கும் புனேரி பல்தான் அணி, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒரு வெற்றிகரமான ரெய்டு மூலம் கணக்கைத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களிலேயே ஒரு அபாரமான டேக்கிள் மூலம் 2-0 என முன்னிலை பெற்றது. ஆனால், தபாங் டெல்லி அணியின் அனுபவமிக்க வீரர் ஃபஸல் அத்ராச்சலியின் டேக்கிள் மூலம் டெல்லி அணி தனது முதல் புள்ளியைப் பதிவு செய்தது.
ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்கள் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றதால், ஆட்டம் சமபலத்துடன் சென்றது. முதல் டைம்-அவுட்டின் போது, தபாங் டெல்லி 8-6 என்ற சிறிய முன்னிலையுடன் இருந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட புனேரி பல்தான், ஒரு சூப்பர் டேக்கிள் மூலம் ஸ்கோரை 8-8 என சமன் செய்தது.
முதல் பாதியின் கடைசி நான்கு நிமிடங்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. தபாங் டெல்லி கேப்டன் ஆஷு மாலிக், தனது மின்னல் வேக ரெய்டில் ஒரு சூப்பர் ரெய்டு நிகழ்த்தி, மூன்று முக்கிய புள்ளிகளைத் தட்டிச் சென்றார். இதனால் டெல்லி அணி 12-10 என முன்னிலை பெற்றது. அந்த உத்வேகத்துடன் தொடர்ந்து புள்ளிகளைக் குவித்த ஆஷு மாலிக், முதல் பாதி முடிவில் தனது அணி 18-13 என்ற வலுவான முன்னிலையுடன் ஓய்வறைக்குச் செல்ல உதவினார்.
இரண்டாம் பாதியில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய புனேரி பல்தான், ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. தொடர்ச்சியாக புள்ளிகளைப் பெற்று, ஸ்கோரை 17-19 என நெருக்கடிக்குள்ளாக்கியது. ஃபஸல் அத்ராச்சலியின் ஒரு சிறிய தவறால், புனேரி பல்தானுக்கு மேலும் ஒரு புள்ளி கிடைக்க, ஸ்கோர் 18-19 ஆனது. அடுத்த சில நிமிடங்களிலேயே, தபாங் டெல்லியை ஆல் அவுட் ஆக்கிய புனேரி பல்தான், 22-21 என முன்னிலை பெற்றது. அந்த ஆதிக்கத்தைத் தொடர்ந்த அவர்கள், 24-21 என முன்னிலையை அதிகரித்தனர்.
புனேரி பல்தான் எளிதாக வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தபாங் டெல்லி மீண்டும் பதிலடி கொடுத்தது. நீரஜ் நர்வால் ஒரு வெற்றிகரமான ரெய்டு மூலம் புள்ளியைப் பெற, அடுத்தடுத்து டேக்கிள்களும் வெற்றிகரமாக அமைய, ஸ்கோர் 24-26 ஆனது. கடைசி நிமிடத்தில் ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது. புனேரி பல்தானின் ரெய்டர் சச்சினை பாக் லைனைத் தாண்ட விடாமல் டெல்லி வீரர்கள் தடுத்ததால், ஆட்டம் 28-28 என சமனில் முடிந்து, டை-பிரேக்கருக்குச் சென்றது. டை-பிரேக்கரின் ஐந்து ரெய்டுகளின் முடிவிலும் இரு அணிகளும் 5-5 என சமநிலையில் இருந்ததால், ஆட்டம் கோல்டன் ரெய்டுக்கு நகர்ந்தது.
கோல்டன் ரெய்டில் டாஸ் வென்ற தபாங் டெல்லி, தங்களது நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் ஆஷு மாலிக்கிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தது. கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பைச் சுமந்துகொண்டு களமிறங்கிய ஆஷு மாலிக், சற்றும் பதற்றமின்றி, ஒரு போனஸ் புள்ளியையும், புனேரி வீரர் கௌரவ் காத்ரியைத் தொட்டு ஒரு புள்ளியையும் என இரண்டு புள்ளிகளை ஒரே ரெய்டில் பெற்று, தபாங் டெல்லிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பரிசளித்தார்.
இந்த ஆட்டத்தில் ஆஷு மாலிக் தனது மற்றுமொரு சூப்பர் 10-ஐ பதிவு செய்ததும், ஃபஸல் அத்ராச்சலி ஒரு ஹை ஃபைவ் (5 டேக்கிள் புள்ளிகள்) எடுத்ததும் டெல்லியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.