வாய்ப்புகளை வீணாக்கியது
நேற்று பெங்கால் வாரியர்ஸ் அணி தெலுகு டைடன்ஸ் அணியை எதிர்கொண்டது. பெங்கால் அணியின் மணிந்தர் சிங் 11 ரெய்டு புள்ளிகள் எடுத்தார். தெலுகு டைடன்ஸ் அணி பல வாய்ப்புகளை வீணாக்கியது. அந்த அணியின் ராகுல் சௌத்ரி கடைசி நிமிடங்களில் 2 டேக்கில் புள்ளிகள் பெறும் வாய்ப்பை நழுவவிட்டார்.
வெற்றி பெற்ற பெங்கால்
முதல் பாதியில் 13-10 என முன்னணியில் இருந்த தெலுகு டைடன்ஸ் அணி தவறுகளால் இரண்டாம் பாதியில் பின்தங்கியது. இறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 30-25 என தெலுகு அணியை வீழ்த்தியது.
தோற்றாலும் முதல் இடம்
இந்த வெற்றியின் மூலம் பெங்கால் அணி இரண்டு போட்டிகளை தொடர்ந்து வென்று புள்ளிகள் பட்டியலில் "பி" பிரிவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தெலுகு டைடன்ஸ் அணி தோல்வி அடைந்தாலும் முந்தைய போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஜெய்ப்பூர் முதல் வெற்றி
இரண்டாம் லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி முதன்முறையாக புரோ கபடி லீக் வரலாற்றில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது. போட்டியின் கடைசி நிமிடங்களில் இரு அணிகளும் புள்ளிகள் வித்தியாசத்தில் நெருக்கமாக இருந்தன. எனினும், இறுதியில் ஜெய்ப்பூர் அணி 36-33 என வெற்றி பெற்றது.
புரோ கபடி லீக் போட்டிகள்
புரோ கபடி லீகில் இன்று (அக்டோபர் 17) தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணியை சந்திக்கிறது. மற்றொரு போட்டியில் யு மும்பா அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை சந்திக்கிறது.