ஹைதராபாத் : புரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி தன் முதல் லீக் போட்டியில் யுபி யுத்தா அணியை தூக்கி அடித்து அபார வெற்றி பெற்றது.
இன்று (ஜூலை 24) நடந்த மற்றொரு லீக் போட்டியில் டபாங் டெல்லி, தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக போராடி ஒரு புள்ளியில் வெற்றி பெற்றது.
பெங்கால் வாரியர்ஸ் - யுபி யுத்தா போட்டியின் முதல் பாதியில் பெங்கால் அணி 17 - யுபி அணி 9 புள்ளிகள் பெற்று இருந்தன. அப்போது முதல் யுபி அணி தொடர்ந்து பின் தங்கி இருந்தது.
முதல் பாதி முடிந்த இரண்டு நிமிடங்களில் யுபி அணி ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து மூன்று முறை ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது யுபி யுத்தா. 28வது நிமிடத்தில் மூன்றாவது ஆல்-அவுட் எடுத்த பின் பெங்கால் அணி 33-13 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பெங்கால் அணி 48-17 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என முடிவு செய்த யுபி யுத்தா அணி தங்கள் அணியில் இருந்த புதிய வீரர்களை களம் காணச் செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்தனர். அந்த அளவிற்கு மோசமான தோல்வியை சந்தித்தது யுபி அணி.
அடுத்த போட்டி, மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. டெல்லி அணியும், தெலுகு அணியும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் போராடினர். முதல் பாதியில் தெலுகு அணி 13-12 என ஒரு புள்ளி முன்னிலையில் இருந்தது.
அதன் பின்னரும் மாற்றி, மாற்றி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், கடைசி நேரத்தில் டபாங் டெல்லி 34-33 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை நிர்ணயித்த டபாங் டெல்லி - தெலுகு டைட்டன்ஸ் போட்டி, இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளிலேயே சிறந்த போட்டியாக அமைந்தது. தெலுகு டைட்டன்ஸ் தன் சொந்த மண்ணில் போராடி தோல்வி அடைந்தது.