ஹைதராபாத் : மிகவும் பரபரப்பாக நடைபெற்ற டபாங் டெல்லி - தமிழ் தலைவாஸ் லீக் போட்டியில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
புரோ கபடி லீக் ஏழாவது சீசனின் ஒன்பதாவது போட்டியில் டபாங் டெல்லி - தமிழ் தலைவாஸ் மோதின. இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தன.
புரோ கபடி லீக் வரலாற்றில் டெல்லி அணியை தமிழ் தலைவாஸ் இதுவரை வீழ்த்தியதே இல்லை. தற்போது தமிழ் தலைவாஸ் அணி வலுவாக இருப்பதால், அந்த குறையைப் போகும் வகையில் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என கருதப்பட்டது.
அதற்கேற்ப முதல் பாதியில் சிறப்பாக ஆடியது தமிழ் தலைவாஸ் அணி. முதல் பாதி முடிவில் 18 - 11 என முன்னிலையில் இருந்தது தமிழ் தலைவாஸ். ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 27-19 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது.
எனினும், கடைசி மூன்று நிமிடங்களில் 29 - 29 என்ற அளவிற்கு முன்னேறி வந்தது டெல்லி அணி. கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் மன்ஜீத் சில்லர் எல்லைக் கோட்டுக்கு வெளியே சென்றார். அதை மறைக்க, ரிவ்யூ கேட்டார். அதில் மாட்டிக் கொண்டார் அவர்.
அதனால், டெல்லி அணிக்கு கூடுதலாக ஒரு புள்ளி கிடைத்தது. அதனால், டெல்லி அணி 30 - 29 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
டெல்லி அணியின் நவீன் குமார் மிகவும் சிறப்பாக ரெய்டு செய்தார். தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர ரெய்டராக இருக்கும் ராகுல் சௌதரியை விட சிறப்பாக இருந்தது அவரது ஆட்டம். தமிழ் தலைவாஸ் அணி ஒரு குழுவாக சிறப்பாக ஆடியது. ராகுல் சௌதரி மற்றும் மன்ஜீத் சில்லர் சிறப்பாக செயல்பட்டனர். எனினும், அந்த அணியால் வெற்றிக் கோட்டை எட்ட முடியவில்லை.