கொல்கத்தா : 2019 புரோ கபடி லீக்கின் 79வது லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டபாங் டெல்லி அணியை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ரெய்டு, டேக்கில் என் எல்லா பக்கமும் ஆதிக்கம் செலுத்திய ஹரியானா அணி, டெல்லியை தூக்கிப் போட்டு தூர் வாரியது. இதுவரை நடந்த போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணியான டெல்லி, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அதனால், அந்த அணி வெற்றி பெறும் என்ற எண்ணமே இருந்தது.
வெற்றி பெறாவிட்டாலும், இப்படி 22 புள்ளிகள் வித்தியாசத்திலா தோல்வி அடைவது? என டெல்லி அணியை பார்த்து பரிதாபப்படும் அளவுக்கு ஆடித் தீர்த்தது ஹரியானா.
ஹரியானா தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று நல்ல பார்மில் உள்ளது. அதே போன்ற பார்மில் இருந்த டெல்லி அணியை வீழ்த்தி சவாலும் விட்டுள்ளது அந்த அணி.
இந்தப் போட்டியில் முதல் பாதி முடிவில் ஹரியானா 21 - 13 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய அந்த அணி 47 - 25 என்ற புள்ளிக் கணக்கில் 22 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹரியானா அணி டெல்லியை மூன்று முறை ஆல் அவுட் செய்தது இந்தப் போட்டியின் சிறப்பான சம்பவமாக அமைந்தது. அதே போல டேக்கில் செய்வதில் ஹரியானா முன்னிலையில் இருந்தது. ஹரியானா 14 டேக்கில் புள்ளிகளும், டெல்லி 5 டேக்கில் புள்ளிகளும் எடுத்தன.
தோல்வி அடைந்தாலும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது டபாங் டெல்லி. 13 போட்டிகளில் 10 வெற்றிகள் பெற்றுள்ளது அந்த அணி. ஹரியானா 13 போட்டிகளில் 9 வெற்றிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.