பாஞ்ச்குலா : ஹரியானா மாநிலம் பாஞ்ச்குலாவில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை 29 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி.
2019 புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றின் 112வது போட்டியில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.
தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே இரண்டு முறை எதிரணியை 50க்கும் மேற்பட்ட புள்ளிகள் எடுக்க விட்டு, மோசமான தோல்விகளை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் மூன்றாவது முறையாக எதிரணியை 50 புள்ளிகள் எடுக்க விட்டது.
இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் மோசமான தடுப்பாட்டத்தை பயன்படுத்திக் கொண்ட குஜராத் அணி 50 - 21 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் முதல் பாதியில் குஜராத் அணி 20 - 9 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 50 புள்ளிகளை எட்டியது. தமிழ் தலைவாஸ் அணி 21 புள்ளிகள் மட்டுமே எடுத்தது.
குஜராத் அணியின் ரோஹித் குலியா 11 ரெய்டு புள்ளிகள், சோனு 15 ரெய்டு புள்ளிகள் எடுத்தனர். இவர்களின் அட்டகாச ரெய்டுகள் காரணமாக தமிழ் தலைவாஸ் அணி மூன்று ஆல் - அவுட் செய்யப்பட்டது. தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே பிளே - ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து விட்ட நிலையில், தொடர்ந்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.