பாஞ்ச்குலா : ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 30 - 37 என்ற புள்ளிக் கணக்கில் உபி யுத்தா அணியிடம் தோல்வி அடைந்தது.
2019 புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகளின் ஒரு பகுதி ஹரியானாவின் பாஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது.
தன் சொந்த மண்ணில் ஹரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி வாகை சூடும் என எதிர்பார்த்த நிலையில், தோல்வி அடைந்தது.
உபி யுத்தா அணி ரெய்டு மற்றும் தடுப்பாட்டம் இரண்டிலும் ஹரியானா அணியை விட சிறப்பாக செயல்பட்டு, அதிக புள்ளிகளை பெற்றது. உபி அணியின் ஸ்ரீகாந்த் ஜாதவ் 10க்கும் மேற்பட்ட ரெய்டு புள்ளிகளையும், நிதேஷ் ஐந்துக்கும் மேற்பட்ட டேக்கில் புள்ளிகளையும் பெற்றனர்.
மேலும், உபி அணி இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம் கடந்த எட்டு போட்டிகளில் ஏழு வெற்றிகளை பெற்று இருக்கிறது.
இந்தப் போட்டியில் இரண்டு அணிகளுமே துவக்கத்தில் தடுமாறின. தடுப்பாட்டம் இரண்டு அணிகளிலும் துவக்கத்தில் மோசமாக அமைந்தது. முதல் பாதி முடிவில் உபி அணி 15 - 11 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில் ஹரியானா அணியால் முன்னிலை பெற முடியவில்லை. உபி அணியை ஒரு முறை ஆல் - அவுட் செய்தும் கூட அந்த அணியால் முன்னிலை பெற முடியவில்லை.
ஆட்ட நேர முடிவில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 30 புள்ளிகள் மட்டுமே எடுத்தது. உபி அணி 37 புள்ளிகள் எடுத்து, ஏழு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.