பெங்களூரு : டபாங் டெல்லி அணியின் நவீன் குமார் மீண்டும் தன் அதிரடி ரெய்டுகளால் தன் அணியை கடைசி நிமிடத்தில் வெற்றி பெற வைத்தார்.
2019 புரோ கபடி லீக் தொடரின் 73வது போட்டியில் டபாங் டெல்லி - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டபாங் டெல்லி அணி 46 - 44 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் நவீன் குமார் அதிரடியாக செயல்பட்டு 16 ரெய்டு புள்ளிகளை அள்ளினார்.
டெல்லி அணியின் வெற்றிக்கு அவர் தான் முழு காரணம். ஜெய்ப்பூர் அணியும் அத்தனை எளிதில் வெற்றியை கொடுத்து விடவில்லை.
போட்டியின் துவக்கத்தில் ஜெய்ப்பூர் அணிக்கு பேரதிர்ச்சி அளித்தது டபாங் டெல்லி. முதல் நான்கு நிமிடங்களுக்குள் அந்த அணியை ஆல் அவுட் செய்தது டபாங் டெல்லி. இந்த சீசனில் இது தான் மிக வேகமான ஆல் அவுட் ஆகும்.
இது கொடூரமான குற்றம்.. அந்த கோச் மீது உடனே நடவடிக்கை எடுங்க.. விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடி!
அதில் இருந்து ஜெய்ப்பூர் அணி மீண்டு வந்து அசத்தியது. 12வது நிமிடத்தில் டெல்லி அணியை ஆல் அவுட் செய்தது ஜெய்ப்பூர். போட்டி மிகவும் விறுவிறுப்பாக மாறியது. இரண்டு சம பலம் கொண்ட அணிகளும் ஆக்ரோஷமாக மோதின.
முதல் பாதியின் முடிவில் டபாங் டெல்லி 21 - 19 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியின் 12வது நிமிடத்தில் மீண்டும் டெல்லி அணியை ஆல் அவுட் செய்தது ஜெய்ப்பூர். அப்போது ஜெய்ப்பூர் அணி 35 - 29 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.
அந்த சரிவில் இருந்து டெல்லி அணியை மீட்டார் நவீன் குமார். தொடர்ந்து பத்தாவது புரோ கபடி லீக் போட்டியில் 10க்கும் மேற்பட்ட ரெய்டு புள்ளிகளை எடுத்து தன் சாதனையை தொடர்ந்தார்.
போட்டி முடிய கடைசி நிமிடம் இருக்கும் போது, ஜெய்ப்பூர் அணியை ஆல் அவுட் செய்தது டெல்லி. அதனால், கிடைத்த கூடுதல் இரண்டு புள்ளிகளை வைத்து வெற்றியும் பெற்றது அந்த அணி. ஆட்ட நேர முடிவில் 46 - 44 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது டபாங் டெல்லி.