நொய்டா : உபி யுத்தா அணி டபாங் டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி பிளே - ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.
2019 புரோ கபடி லீக் தொடரின் 122வது லீக் போட்டியில் உபி யுத்தா - டபாங் டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் உபி யுத்தா அணி 50 - 33 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டெல்லி அணியின் நட்சத்திர ரெய்டர் நவீன் குமார் அணியில் பங்கேற்கவில்லை. அதுவே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்.
உபி யுத்தா அணியின் நட்சத்திர ரெய்டர் மோனு கோயாத் 11 ரெய்டு புள்ளிகள் பெற்று அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
டெல்லி அணி முதல் பாதியில் படுமோசமாக ஆடியது. முதல் பாதி, முடிவில் உபி யுத்தா அணி 22 - 12 என்ற அளவில் முன்னிலை பெற்று இருந்தது.
இரண்டாம் பாதியில் இன்னும் வேகம் எடுத்த உபி யுத்தா அணி டெல்லி அணியை ஒட்டுமொத்தமாக மூன்று முறை ஆல் அவுட் செய்து மிரட்டியது.
டெல்லி அணியின் நீரஜ் அகர்வால் தனி ஆளாக ரெய்டுகளில் போராடினார். அவர் 10க்கும் மேற்பட்ட புள்ளிகளை எடுத்தது மட்டுமே டெல்லி அணிக்கு சாதகமான விஷயம்.
ஆட்ட நேர முடிவில் உபி யுத்தா 50 - 33 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று பிளே - ஆஃப் செல்வதை உறுதி செய்தது.