ஜெய்ப்பூர் : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெல்வது கடினம் என எண்ணிய நிலையில் தமிழக வீரர் அபிஷேக் தடுப்பாட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தார். அதுவும் சரியாக மாட்டுப் பொங்கல் அன்று அங்கே அலங்காநல்லூரில் காளைகள் சீறிப் பாய, இங்கே கபடி களத்தில் அபிஷேக் தடுப்பாட்டத்தில் எந்த ரெய்டரையும் நெருங்க விடாமல் சீறிப் பாய்ந்தார்.
இதுவரை அபிஷேக்கின் தடுப்பாட்டம் குறித்து கடும் விமர்சனம் இருந்து வந்தது. அது குறித்து நமது யூட்யூப் சேனலான ஒன்இந்தியா ஹௌசாட்-க்கு அவர் அளித்த பேட்டியில் அவரே குறிப்பிட்டு இருந்தார். தனது பாணி தடுப்பாட்டம் என்பது எதையும் யோசிக்காமல் இறங்கி ரெய்டரை பிடிப்பது தான் எனக் கூறி இருந்தார்.

இத்தனை காலமாக அவரது பாணி சரியாக கைகூடாத நிலையில், இன்று பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவரது அதிரடி தடுப்பாட்டம் தமிழ் தலைவாஸ் அணிக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. அவர் தடுப்பாட்டத்தில் 7 புள்ளிகளை பெற்று அதிரடி காட்டினார். 13 போட்டிகளில் தன் நான்காவது வெற்றியை பெற்றது தமிழ் தலைவாஸ்.
முன்னதாக இந்தப் போட்டியில் துவக்கம் முதலே பாட்னா அணி பின்தங்கி இருந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் அஜின்க்யா பவார் ரெய்டுகளில் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை பெற்றார். நரேந்தர் ரெய்டுகளில் தடுமாறினார். ஆனாலும், அஜின்க்யா அதையும் சேர்த்து சமாளித்தார். அஜின்க்யா 10 புள்ளிகளும், நரேந்தர் 6 புள்ளிகளும் பெற்றனர்.
தமிழ் தலைவாஸ் அணியின் ரெய்டு தோல்வி அடைந்த போட்டிகளிலும் இதே போலத் தான் இருந்தது. அந்த வகையில் பார்த்தால் இந்தப் போட்டியில் பெரிய வித்தியாசமாக இருந்தது அந்த அணியின் தடுப்பாட்டம் தான். வலது முனையில் அபிஷேக்கும், இடது முனையில் சாஹில் குஹிலாவும் இரண்டு பீரங்கிகள் போல நின்று பாட்னா அணியின் ரெய்டர்களை கொத்தாக பிடித்தனர். சாஹில் 6 முயற்சிகளில் 5 முறை ரெய்டர்களை பிடித்தார். அபிஷேக் 9 முயற்சிகளில் 7 முறை ரெய்டர்களை பிடித்தார்.
ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 41 - 25 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது. அஜின்க்யா பவார், அபிஷேக், சாஹில் என கூட்டு முயற்சியால் தமிழ் தலைவாஸ் அணி வென்றது. ஆனால், குறிப்பிடத்தக்க விஷயம் அபிஷேக் நீண்ட காலத்துக்கு பின் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். இனி வரும் போட்டிகளிலும் அவர் இதே போல வெற்றிகரமாக செயல்பட்டால் தமிழ் தலைவாஸ் அணி தொடர் வெற்றிகளை பெறும் என்பதில் சந்தேகமில்லை.