சென்னை : 2023 புரோ கபடி லீக் தொடரின் 39வது போட்டியில் பெங்களூரு புல்ஸ் - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
தெலுகு டைட்டன்ஸ் அணி மிக மோசமான நிலையில் இருந்ததால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து ஒன்று, இரண்டு இடமாவது முன்னேறுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தெலுகு டைட்டன்ஸ் அணியில் நட்சத்திர ரெய்டர் பவன் செஹ்ராவத் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வீரராக இருக்கிறார். அவரை நம்பி போட்டியில் ஆடியது அந்த அணி. ஆனால், பெங்களுரு புல்ஸ் அணியில் தடுப்பாட்டம் மிக சிறப்பாக இருந்ததால் துவக்கம் முதலே பவன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் திணறினார்.
இந்த நிலையில், முதல் பாதியில் பெங்களுரு புல்ஸ் 16 - 12 என்ற அளவில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியிலும் புல்ஸ் அணி ஆதிக்கத்தை தொடர்ந்தது. கடைசி 4 நிமிடங்கள் இருந்த போது அந்த அணி 30 - 22 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என எண்ணிய நிலையில், பெங்களுரு அணியை கதி கலங்க வைத்தது பவன் செஹ்ராவத்தின் சூப்பர் ரெய்டு.
கடைசி 3 நிமிடங்கள் இருந்த போது, பெங்களுரு அணியில் மூன்று வீரர்கள் களத்தில் இருந்த நிலையில் பவன் ரெய்டு சென்றார். அவர்கள் மூவரையும் ஒரே ரெய்டில் அவுட் ஆக்கி வெளியேற்றினார். பெங்களுரு அணி ஆல் - அவுட் ஆனதால் கூடுதலாக 2 புள்ளிகளும் கிடைத்தது. இதை அடுத்து 2 புள்ளிகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலையில் இருந்தது பெங்களுரு.
எப்படியோ போராடி ஆட்ட நேர முடிவில் பெங்களுரு புல்ஸ் 33 - 31 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றது. தெலுகு டைட்டன்ஸ் அணி தான் ஆடிய ஏழு போட்டிகளில் தன் ஆறாவது தோல்வியை பதிவு செய்தது.