மும்பை : தெலுகு டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் சஞ்சீவி ரெய்டுகளில் அதிக புள்ளிகளை பெற்ற நிலையில் அவரை இரண்டாம் பாதியில் குறி வைத்து பிடித்தது குஜாரத் ஜெயன்ட்ஸ். அது போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது.
புரோ கபடி லீக் பத்தாவது சீசன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றில் தெலுகு டைட்டன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. தான் ஆடிய 9 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த தெலுகு டைட்டன்ஸ் அணி இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முடிவுடன் களமிறங்கியது.

முதல் பாதியில் தெலுகு அணியின் நட்சத்திர ரெய்டர் பவன் அதிக நேரம் வெளியே இருந்த நிலையில், இரண்டாம் கட்ட ரெய்டர் சஞ்சீவி போனஸ் புள்ளிகளை சேர்த்து பெற்று தன் ரெய்டுகளில் புள்ளிகளை அள்ளினார். முதல் பாதி நேரத்தின் முடிவில் தெலுகு அணி 19 - 14 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. இதை அப்படியே தக்க வைத்தால் முதல் வெற்றியை பெறலாம் என்ற நிலையில் இருந்தது டைட்டன்ஸ் அணி.
ஆனால், குஜராத் அணி தடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக இரண்டாம் பாதியில் பவன் இல்லாத நிலையில் சஞ்சீவி ரெய்டு சென்று புள்ளிகளை பெற்றார். ஆனால், குஜராத் அணி அவரை வெளியே அனுப்பினால் தான் வெல்ல முடியும் என முடிவு செய்து இரண்டு முறை அவரை வெற்றிகரமாக பிடித்து வெளியே அனுப்பியது. ஆட்ட நேர இறுதியில் 37 புள்ளிகளை பெற்று, 7 புள்ளிகள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. தெலுகு டைட்டன்ஸ் அணி 30 புள்ளிகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது.
இன்று நடந்த மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 41 - 31 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது.