ஜெய்ப்பூர் : 10வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - புனேரி பல்தான் அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதல் பாதியில் மோசமான நிலையில் இருந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இரண்டாம் பாதியில் சுதாரித்து ஆடி வெற்றி பெற்றது. அதனால், இரண்டாவது பாதி முழுவதும் பரபரப்பாக சென்றது.

ஜெய்ப்பூர் அணியின் நட்சத்திர ரெய்டர் அர்ஜுன் தேஷ்வால் இரண்டாம் பாதியில் வீறு கொண்டு எழுந்து புனேரி அணிக்கு எதிராக ரெய்டு சென்ற போதெல்லாம் புள்ளிகளை அள்ளினார். அவர் மொத்தம் 21 ரெய்டுகள் சென்று அதில் 11 ரெய்டுகளில் 16 புள்ளிகளை எடுத்தார்.
முதல் பாதியில் 11 - 20 என்ற அளவில் பின்தங்கி இருந்த ஜெய்ப்பூர் அணி, இரண்டாம் பாதியில், புனேரி அணியை முந்தியது. ஆனால், புனேரி அணியும் ஈடு கொடுத்து ஆடியதால் இரண்டாம் பாதியின் கடைசி ஐந்து நிமிடங்கள் பரபரப்பாக இருந்தன. ஆட்ட நேர முடிவில் 36 - 34 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.
புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் புனேரி பல்தான் அணி இந்த சீசனில் தன் இரண்டாவது தோல்வியை சந்தித்தது. தற்போது புள்ளிப் பட்டியலில் புனேரி பல்தான் அணி 12 போட்டிகளில் 10 வெற்றிகளை பெற்று 52 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜெய்ப்பூர் அணி 12 போட்டிகளில் 10 வெற்றிகளை பெற்று, 48 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.