அகமதாபாத் : புரோ கபடி லீக் தொடரில் இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனையை செய்து சரித்திரம் படைத்துள்ளார் பர்தீப் நார்வால்.
கிரிக்கெட்டில் சதம் அடிப்பதை போல, கபடியில் ஒரே போட்டியில் ஒரு ரெய்டர் 10 புள்ளிகள் பெற்றால் அதை சூப்பர் 10 எடுத்ததாக கூறி வருகின்றனர். அந்த சூப்பர் 10இல் தான் புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளார் பர்தீப் நார்வால்.
இந்த சீசனில் யுபி யுத்தாஸ் அணிக்காக ஆடி வரும் அவர், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 புள்ளிகளுக்கு மேல் பெற்று சூப்பர் 10 எடுத்தார். இது அவரது 80வது சூப்பர் 10 ஆகும்.

பர்தீப் நார்வால் புரோ கபடி லீகின் நட்சத்திர ரெய்டர் ஆவார். அவர் எதிரணியை நோக்கி ரெய்டு சென்றால் நிச்சயம் புள்ளிகளை எடுக்காமல் விட மாட்டார் என்ற பெயர் உண்டு. அது போல ஒவ்வொரு போட்டியிலும் சூப்பர் 10 எடுப்பதும் இவரது இயல்பாகவே மாறி விட்டது. சில சீசன்களில் தொடர்ந்து 10 போட்டிகளுக்கும் மேலாக கூட சூப்பர் 10 எடுத்து இருக்கிறார்.
தற்போது 80 சூப்பர் 10 எடுத்து இருக்கும் அவர் இந்த சீசனில் இன்னும் 20 போட்டிகள் மீதமிருப்பதால் அவை அனைத்திலும் சூப்பர் 10 எடுத்து 100 சூப்பர் 10 என்ற இமாலய சாதனையை செய்ய உள்ளதாக கூறி இருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் 10வது புரோ கபடி லீக் தொடரில் பர்தீப் நார்வால் இரண்டு போட்டிகளில் ஆடி ஒரு சூப்பர் 10 எடுத்துள்ளார். அவருக்கு போட்டியாக குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் சோனு 4 போட்டிகளில் ஆடி 3 சூப்பர் 10 எடுத்துள்ளார். பவன் செராவத் இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் சூப்பர் 10 எடுத்துள்ளார். மணிந்தர் சிங், பவானி ராஜ்புத் ஆகியோர் பர்தீப்புக்கு இணையாக இரண்டு போட்டிகளில் ஆடி ஒரு சூப்பர் 10 எடுத்துள்ளனர்.