சென்னை : புரோ கபடி லீக் தொடரில் பாட்னா பைரேட்ஸ் அணியில் கலக்கி வரும் தமிழக வீரர் சஜின் ஒன்இந்தியா ஹௌசாட் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இளம் வயதிலேயே கபடி வீரராக மாறிய சஜின் பத்து ஆண்டுகளுக்கு முன் தந்தையை இழந்து, ஏழ்மையான குடும்ப சூழ்நிலைக்கு நடுவே போராடி இன்று தேசிய அளவில் அறியப்படும் கபடி வீரராக மாறி இருக்கிறார்.

பள்ளியில் படிக்கும் போது மற்ற மாணவர்களுடன் கபடி ஆடுவதில் ஆர்வமாக இருந்தவர், அடுத்து தன் சகோதரர் கபடி விளையாட செல்வதை பார்த்து தானும் அவர்களுடன் சென்று கபடி பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். பின்னர் 2007இல் கபடி கிளப்பில் இணைந்து இருக்கிறார். பின்னர் போட்டிகளில் அவர் ஆடத் துவங்கினார்.
கபடி என்றாலே அடிபடும் என்பதால் வீட்டில் கபடி ஆட்டத்தை கைவிடுமாறு அவரது தாய் கூறி இருக்கிறார். ஆனால், அடிபட்டாலும் கைவிடாமல் தொடர்ந்து கபடி ஆடி புரோ கபடி லீக் வரை வாய்ப்பு பெற்று கலக்கி இருக்கிறார். இவர் டிப்ளோமா படித்து, பின் எஞ்சினியரிங் படித்து இருக்கிறார்.
தமிழக வீரராக இருந்து, தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பெற முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும், பாட்னா பைரேட்ஸ் அணி ஏலத்தில் தன்னை எடுத்ததாக குறிப்பிட்டார். காயம் ஏற்பட்டால் ஒரு வீரருக்கு மனதளவில் பின்னடைவு ஏற்படும் அதில் இருந்து மீண்டு அணியில் இடம் பெறுவது மிகவும் கடினம் எனக் கூறினார். ஒழுக்கமாக இருந்தால், கடினமாக உழைத்தால் புரோ கபடி லீக் தொடரில் மற்ற இளம் வீரர்களும் பங்கேற்கலாம். எனக்கே 25 வயதில் தான் புரோ கபடியில் வாய்ப்பு கிடைத்தது என்று சஜின் குறிப்பிட்டார்.
2012இல் என் தந்தை இறந்து விட்டார். பின் தாயின் உழைப்பால் குடும்பம் நடந்தது. பின்னர் நான் கபடி தான் வாழ்க்கை என முடிவு செய்து உழைத்தேன். கபடி வீரர்கள் எந்த காரணத்தை கொண்டும் மது அருந்தக் கூடாது என்றும் கூறினார் சஜின். அவரது பேட்டியின் முழு வீடியோவை இங்கே இணைத்துள்ளோம்.