சென்னை : தமிழ் தலைவாஸ் அணியில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ரெய்டர் மாசானமுத்து தன் போட்டி அனுபவங்களை பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அப்போது தான் முதன்முதலில் ஆடியதை தன் தாயால் பார்க்க முடியவில்லை என வேதனையை வெளிப்படுத்தினார்.
தமிழ் தலைவாஸ் அணி கடந்த 2023 புரோ கபடி லீக் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த மாசானமுத்துவை சுமார் 31.60 லட்சம் கொடுத்து வாங்கியது. அந்த ஏலத்தில் அதுவே அந்த அணி ஒரு வீரருக்கு கொடுத்த அதிகபட்ச விலையாகும்.

இந்த நிலையில் முதல் சில போட்டிகளில் மாசானமுத்து போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற லீக் போட்டிகளின் போது அவரை சொந்த மண்ணில் களமிறக்கியது தமிழ் தலைவாஸ் அணி. அது குறித்து அவரிடம் எங்களின் குழுமத்தை சேர்ந்த OneIndia Howzat யூட்யூப் சேனலில் பேட்டி எடுத்த போது அவர் தன் மனநிலை மற்றும் தன் குடும்பத்தின் தற்போதைய நிலை ஆகியவற்றை பகிர்ந்து கொண்டார்.
மாசானமுத்து தனது போட்டி அனுபவம் குறித்து பேசுகையில், "நான் சரியாக ஆடவில்லை என நினைக்கிறேன். ரசிகர்களை ஏமாற்றி விட்டதாக உணர்கிறேன். இன்னும் நன்றாக ரெய்டுகளில் பாயின்ட் எடுத்து இருக்கலாம்." என்றார்.
மாசானமுத்துவின் வீடு சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் வீடு இருந்தது. அப்போது மின்சாரமும் இல்லை என்பதால் அவரது தாயால் தான் ஆடியதை பார்க்க முடியவில்லை என வருந்தினார். அவர் அளித்த பேட்டியை முழுமையாக இங்கே காணலாம்.