மும்பை : தெலுகு டைட்டன்ஸ் கபடி அணியில் இடம் பெற்று இருக்கும் தமிழக வீரர் சஞ்சீவிக்கு சரியான வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மண்ணைக் கவ்வி இருக்கிறது.
பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் 64வது லீக் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. புள்ளிப் பட்டியலில் ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்று பாதாளத்தில் இருந்த தெலுகு டைட்டன்ஸ் அணி இந்தப் போட்டியிலாவது வெற்றி பெறாதா? என்ற எதிர்பார்ப்புடன் போட்டி தொடங்கியது.

போட்டி தொடங்கிய எட்டாவது நிமிடத்தில் தெலுகு அணி ஆல் - அவுட் ஆனது. அடுத்து 23வது நிமிடத்தில் மீண்டும் ஆல் - அவுட் ஆனது. முதல் பாதியின் முடிவில் 10 - 27 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கி இருந்தது தெலுகு டைட்டன்ஸ் அணி.
அந்த அணி இந்தப் போட்டியில் முக்கிய ரெய்டர்களாக பவன் செஹ்ராவத் மற்றும் பிரஃபுல் ஜவாரேவை பயன்படுத்தியது. அவர்கள் இருவருமே பல ரெய்டுகளில் அவுட் ஆகி சொதப்பினர். ஆல் - ரவுண்டர் ஆன சஞ்சீவி இதற்கு முந்தைய போட்டியில் ரெய்டுகளில் அதிகம் அவுட் ஆகாமல் ஆடி இருந்தார். ஆனால், அவரை இந்தப் போட்டியில் 3 ரெய்டுகளில் மட்டுமே பயன்படுத்தியது தெலுகு டைட்டன்ஸ் அணி.
ஆனால், இரண்டாம் கட்ட ரெய்டரான பிரஃபுல் 10 ரெய்டுகள் சென்று 1 புள்ளி மட்டும் பெற்று இருந்தார். அவருக்கு பதிலாக சஞ்சீவியை 10 ரெய்டுகள் கூடுதலாக அனுப்பி இருந்தால் ஓரளவு புள்ளிகள் கிடைத்து இருக்கும். இப்படி போட்டி திட்டத்தில் சொதப்பிய தெலுகு டைட்டன்ஸ் ஆட்ட நேர முடிவில் 26 - 46 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.
இதுவரை தான் ஆடிய 11 போட்டிகளில் 1 வெற்றி மற்றும் 10 தோல்விகளை பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 12வது இடத்தில் உள்ளது தெலுகு டைட்டன்ஸ் அணி. பெங்கால் வாரியர்ஸ் அணி 11 போட்டிகளில் ஆடி தன் 4வது வெற்றியை பெற்றது. அந்த அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.