ஹைதராபாத் : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் லீக் சுற்றில் முதல் இடம் பிடித்த புனேரி பல்தான் அணியை எதிர்த்து ஐந்தாம் இடம் பிடித்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி களமிறங்கியது.
ஹரியானா அணி எலிமினேட்டர் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியையும், அரை இறுதியில் வலுவான அணியாக கருதப்பட்ட ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியையும் வீழ்த்தி இருந்தது. மறுபுறம் லீக் சுற்றில் முதல் இடம் பிடித்ததன் மூலம் நேரடியாக அரை இறுதிக்கு தகுதி பெற்ற புனேரி பல்தான் அணி, மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

இதனை அடுத்து இறுதிப் போட்டியில் புனேரி பல்தான் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் துவக்கம் முதலே புனேரி அணி முன்னிலை வகித்தது. எனினும், அதிக வித்தியாசம் இல்லாமல் பார்த்துக் கொண்டது ஹரியானா அணி. அதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் போட்டியில் நிலைமை மாறலாம் என்ற பரபரப்பு நீடித்தது.
முதல் பாதியின் முடிவில் புனேரி பல்தான் 13, ஹரியானா 10 புள்ளிகள் பெற்று இருந்தன. இரண்டாம் பாதியில் ஹரியானா அணியை ஆல் - அவுட் செய்தது புனேரி. அதன் மூலம் கிடைத்த கூடுதல் இரண்டு புள்ளிகள் காரணமாக புனேரி அணியின் முன்னிலை வித்தியாசம் அதிகரித்து 7 புள்ளிகள் வரை சென்றது. இந்த நிலையில் கடைசி 3 நிமிடங்களில் ஹரியானா ரெய்டுகளில் அனல் பறந்தது. எனினும், ஆட்ட நேர முடிவில் 28 - 25 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியானா அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
லீக் சுற்றில் முதல் இடம் பிடித்த புனேரி பல்தான் அணி, தன் பலத்தை மீண்டும் நிரூபித்து பத்தாவது சீசன் புரோ கபடி லீக் சாம்பியன் பட்டம் வென்றது. இதுவே புனேரி பல்தான் அணியின் முதல் புரோ கபடி லீக் பட்டம் ஆகும். அதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளது புனேரி பல்தான்.