சென்னை : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றில் அதிக வெற்றிகளை குவித்து நம்பர் 1 அணியாக வலம் வரும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை முதல் பாதியில் மிரள வைத்தது தமிழ் தலைவாஸ் அணி. முதல் பாதியில் 17 - 15 என்ற புள்ளிக் கனக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று உச்சகட்ட வெறியில் இருந்த தமிழ் தலைவாஸ் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி விடும் என முதல் பாதியின் முடிவில் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால். அதற்கு நேர் மாறாக இரண்டாம் பாதியில் சுதாரித்த பிங்க் பாந்தர்ஸ் ரெய்டர்கள் தமிழ் தலைவாஸ் அணியை பந்தாடினார்கள்.

அதன் விளைவாக ஆட்ட நேர முடிவில் 42 - 27 என்ற அளவில் 15 புள்ளிகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ். இரண்டாம் பாதியில் மட்டும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 27 புள்ளிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் தலைவாஸ் அணியைப் பொறுத்தவரை இதை மோசமான தோல்வியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், அந்த அணி இதற்கு முன் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட போட்டிகளில் தோல்வி அடைந்து இப்போது தான் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறது.
மேலும், வலுவான அணிகளில் ஒன்றான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்த்து முதல் பாதியில் கூடுதல் புள்ளிகள் பெற்ற நிலையில் அதுவே தமிழ் தலைவாஸ் அணிக்கு பெரிய ஊக்கம் ஆகும். இந்தப் போட்டியின் தோல்வியை வீரத் தழும்பாக எடுத்துக் கொண்டு அடுத்த போட்டியில் மற்றொரு வலுவான அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்றால் தமிழ் தலைவாஸ் மீண்டும் வெற்றிப் பாதைக்கு உற்சாகத்துடன் திரும்பலாம். தற்போது பிளே-ஆஃப் வாய்ப்பை குறி வைத்திருக்கும் நிலையில் அது மட்டுமே தமிழ் தலைவாஸ் அணிக்கு முக்கியமான விஷயமாகும்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் தற்போது 71 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதோடு, முதல் அணியாக பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.