சென்னை: 2024 புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. டிசம்பர் 24 உடன் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வருகின்றன. இந்த நிலையில், தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் மிகவும் மோசமாக விளையாடி இருக்கிறது. அந்த அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது.
புரோ கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்று உள்ளன. இதில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 11 அணிகளுடன் இரண்டு முறை மோதும். ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 போட்டிகளில் விளையாடும். இதன் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் ஆறு இடங்களை பெறும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

தற்போதைய நிலையில் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் 45 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை 20 போட்டிகளில் விளையாடி 45 புள்ளிகள் மட்டுமே பெற்று இருக்கிறது. 7 வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது. மீதம் உள்ள இரண்டு போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி வென்றாலும் கூட அதிகபட்சமாக 55 புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.
ஆனால், ஆறாவது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 66 புள்ளிகள் வேண்டும். அதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் தமிழ் தலைவாஸ் அணி குரூப் சுற்று முடிந்த உடன் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது.
தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றிற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளன. இன்னும் ஆறாவது இடம் மட்டுமே மீதம் உள்ளது. யு மும்பா அணி ஆறாவது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன.
அந்த அணி தற்போது 66 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் 7 புள்ளிகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் கூட போனஸ் புள்ளியை பெற்று 67 புள்ளிகள் பெறும். அதன் மூலம், தற்போது 66 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் இருக்கும் தெலுகு டைட்டன்ஸ் அணியை முந்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுகு டைட்டன்ஸ் அணி 22 லீக் போட்டிகளில் விளையாடி முடித்த நிலையில் 66 புள்ளிகளை மட்டுமே பெற்று உள்ளது. தற்போதைய நிலையில் ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ், டபாங் டெல்லி, யுபி யுத்தாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய ஐந்து அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
யு மும்பா அணியும் பிளே ஆஃப் முன்னேறும் என எதிர்பார்க்கலாம். தமிழ் தலைவாஸ் அணி மீதம் உள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக எட்டாவது இடத்தை பிடிக்க சிறிய அளவில் வாய்ப்பு உள்ளது.