ஹைதராபாத்: 2024 புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 11 போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று மோசமான நிலையில் உள்ளது. தற்போது புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி ஏழாவது இடத்தில் உள்ளது. அந்த அணியால் முதல் இடத்திற்கு முன்னேற முடியுமா? குறைந்தபட்சம் முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேற முடியுமா? என்பது பற்றி பார்க்கலாம்.
11 வது சீசனாக புரோ கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்கத்தில் அபாரமாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி முதல் ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றிகள், ஒரு தோல்வி மற்றும் ஒரு டிரா செய்து முதல் இடத்தில் இருந்தது. ஆனால், அதன் பின் வரிசையாக தோல்விகளை சந்தித்த அந்த அணி 11 போட்டிகளின் முடிவில் நான்கு வெற்றிகள், ஆறு தோல்விகள், ஒரு டிரா செய்து 28 புள்ளிகள் உடன் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு சென்று உள்ளது.

தற்போது முதல் இடத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி உள்ளது. அந்த அணி பத்து போட்டிகளில் எட்டு வெற்றிகளை பெற்று 41 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (35 புள்ளிகள்), புனேரி பல்தான்ஸ் (34 புள்ளிகள்), யு மும்பா (34 புள்ளிகள்), பாட்னா பைரேட்ஸ் (33 புள்ளிகள்), டபாங் டெல்லி (32 புள்ளிகள்) உள்ளன.
இந்த ஆறு அணிகளையும் முந்தி முதல் இடத்தை பிடிப்பது என்பது தமிழ் தலைவாஸ் அணிக்கு சவாலானதாகவே இருக்கும். அதே சமயம் அடுத்த ஐந்து போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்றால் நிச்சயமாக முதல் மூன்று இடங்களுக்குள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.
அதற்கான வாய்ப்பும் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரை எந்த போட்டியிலும் மோசமான தோல்வியை பெறவில்லை. தோல்வி அடைந்த போட்டிகள் எதிலும் பத்து புள்ளிகளுக்கும் மேற்பட்ட வித்தியாசத்தில் தோற்கவில்லை. மேலும், அந்த அணியின் புள்ளி வித்தியாசம் 24 ஆக உள்ளது. இது தமிழ் தலைவாஸ் அணிக்கு சாதகமான விஷயமாக உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக இருப்பதாலேயே புள்ளி வித்தியாசம் பெரிய அளவில் உள்ளது. புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜெய்ப்பூர் அணியை விட ஏழு புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ளது. எனவே சிறு சிறு தவறுகளை சரி செய்து வெற்றிப் பாதைக்கு திரும்பினால் லீக் சுற்று முடிவதற்குள் நிச்சயமாக தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க முடியும்.