சென்னை : 2024 புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் இனி பிளே - ஆஃப் செல்ல வாய்ப்பே இல்லை என நேற்று வரை நிலைமை இருந்தாலும் இன்று அதற்கான சிறிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்று கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது. பெரும்பாலான அணிகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான் மற்றும் டபாங் டெல்லி ஆகிய மூன்று அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளன.
இன்னும் பிளே-ஆஃப் வாய்ப்பை மூன்று அணிகள் பெற முடியும் என்பதால் அதற்கு ஐந்து அணிகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதில் தமிழ் தலைவாஸ் அணியும் ஒன்று. தற்போது அந்த அணிக்கு மூன்று லீக் போட்டிகள் மீதமுள்ளன. அந்த அணி 45 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், தன் கடைசி மூன்று லீக் போட்டிகளில் வெற்றி பெற்றால் 60 புள்ளிகளை பெறலாம்.

தற்போது புள்ளிப் பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணிக்கு மேலே உள்ள நான்கு அணிகளில் பாட்னா பைரேட்ஸ் அணி 63 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. அந்த அணியை தமிழ் தலைவாஸ் அணியால் முந்த முடியாது. அந்த அணியைத் தவிர்த்து மீதமுள்ள மூன்று அணிகளை தமிழ் தலைவாஸ் அணியால் முந்த முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.
ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இரண்டுமே 60 புள்ளிகள் பெற்றுள்ளன. குஜராத் அணிக்கு மூன்று போட்டிகளும், ஹரியானா அணிக்கு நான்கு போட்டிகளும் மீதமுள்ளன. இந்த இரண்டு அணிகளில் ஒரு அணி தனது மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் தோல்வி அடைய வேண்டும். அப்படி நடந்தால் அந்த அணி 60 புள்ளிகள் மட்டுமே பெற்று இருக்கும்.
இத்துடன் ஏழு மற்றும் எட்டாம் இடத்தில் இருக்கும் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் பெங்களுரு புல்ஸ் அணிகள் தங்களுக்கு மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒரு போட்டியிலாவது தோல்வி அடைய வேண்டும். அப்படி நடந்தால் அந்த இரண்டு அணிகளால் 60 புள்ளிகள பெற முடியாமல் போகும். அப்போது மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறும் தமிழ் தலைவாஸ் அணி அந்த இரண்டு அணிகளை முந்தி 60 புள்ளிகள் பெறும்.
அதன் பின் ஹரியானா அல்லது குஜராத் அணிகளில் எந்த அணி 60 புள்ளிகளுடன் இருக்கிறதோ அந்த அணியை புள்ளிகள் வித்தியாசத்தின் அடிப்படையில் தமிழ் தலைவாஸ் முந்தி ஆறாம் இடத்தை பெறும். இப்போதே தமிழ் தலைவாஸ் அணி 24 புள்ளி வித்தியாசத்துடன் தனக்கு மேலே இருக்கும் நான்கு அணிகளை விட அதிக புள்ளி வித்தியாசம் கொண்ட அணியாக உள்ளது. அதை வைத்து ஆறாம் இடத்தை பெற்று தமிழ் தலைவாஸ் அணி பிளே-ஆஃப் செல்ல முடியும். இது பார்க்க கடினமாக இருந்தாலும் இது நடக்க சாத்தியக் கூறுகள் உள்ளன.