ஹைதராபாத் : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் இரண்டு அரை இறுதிப் போட்டிகள் நடந்து முடிந்தன. அதில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்த்ர்ஸ் அணியை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணியை புனேரி பல்தான் அணி வீழ்த்தியது.
இதன் மூலம், ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. இதில் புனேரி பல்தான் அணி லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. லீக் சுற்றில் முதல் இடத்தை பிடித்து இருந்தது.

மறுபுறம் புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடம் பிடித்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, இரண்டாம் இடம் பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி இருப்பது தான் வியப்பை ஏற்படுத்தியது.
முதல் அரை இறுதியில் புனேரி பல்தான் அணி 37 - 21 என்ற புள்ளிக் கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. இரண்டாவது அரை இறுதியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 27 - 31 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இருந்தது ஹரியானா.
புனேரி பல்தான் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையேயான இறுதிப் போட்டி மார்ச் 1 அன்று ஹைதராபாத், கச்சிபௌவ்லி அரங்கத்தில் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த தொடரில் முதலில் நடைபெற்ற லீக் சுற்றில் பங்கேற்ற 12 அணிகள் தங்களுக்குள் தலா இரு முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த புனேரி பால்டன், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.
புள்ளிப் பட்டியலில் 3 முதல் 6 வரையிலான இடங்களை பெற்ற அணிகள் எலிமினேட்டர் சுற்றில் சந்தித்தன. இதில் பாட்னா பைரட்ஸ், டபாங் டெல்லியையும், ஹரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வீழ்த்தின.