மும்பை : 10வது சீசன் புரோ கபடி லீக் தொடரில் பாட்னா பைரேட்ஸ் - டபாங் டெல்லி அணிகள் இடையே நடந்த போட்டியில் தமிழக வீரர் சுதாகர் பாட்னா அணிக்காக கடைசி நிமிடங்களில் போராடி புள்ளிகளை அள்ளினார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாட்னா அணி வெறும் 1 புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் துவக்கத்தில் டபாங் டெல்லி அணி வேகமாக புள்ளிகளை பெற்றது. அந்த அணியின் கேப்டன் ஆஷு மாலிக் ரெய்டுகளில் அபாரமாக செயல்பட்டார். அந்த அணியின் தடுப்பாட்டமும் முதல் பாதியில் துல்லியமாக இருந்தது.

முதல் பாதி நேரத்தில் 13 - 26 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா அணி பின்தங்கியது. ஆனால், இரண்டாம் பாதியில் விட்டதை பிடிக்க முடிவு செய்த அந்த அணியின் ரெய்டர்கள் சச்சின் மற்றும் சுதாகர் போராடினர். சச்சின் நிறைய ரெய்டுகளில் சொதப்பிய நிலையில், கடைசி ஐந்து நிமிடங்களில் சுதாகர் தொடர்ந்து ரெய்டுகளில் புள்ளிகளை பெற்றார். ஆனால், ஆட்ட நேர இறுதியில் 37 - 38 என்ற புள்ளிக் கணக்கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி தோல்வி அடைந்தது. டபாங் டெல்லி வெற்றி பெற்றது.
சிறப்பாக செயல்பட்ட சுதாகர் 12 ரெய்டுகளில் 9 ரெய்டு புள்ளிகளை பெற்றார். சச்சின் 20 ரெய்டுகளில் 10 புள்ளிகளை பெற்று இருந்தார். சுதாகரை அதிக ரெய்டுகளில் பயன்படுத்தி இருந்தாலே பாட்னா அணி வெற்றி பெற்று இருக்கும். இனி வரும் போட்டிகளில் அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மற்றொரு லீக் போட்டியில் யு மும்பா - பெங்களுரு புல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் யு மும்பா 40 - 35 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களுரு அணியை வீழ்த்தியது. இந்த இரண்டு போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் தோல்வி அடைந்த பாட்னா பைரேட்ஸ் அணி ஆறாவது இடத்திலும், பெங்களுரு புல்ஸ் எட்டாவது இடத்திலும் உள்ளன. வெற்றி பெற்ற டபாங் டெல்லி இரண்டாவது இடத்திலும், யு மும்பா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.