சென்னை : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி, யு மும்பா அணியை கதற விட்டது. மாற்று வீரர்கள் ஒருவரைக் கூட உள்ளே அழைக்காத தமிழ் தலைவாஸ் கடைசி வரை 7 வீரர்களை மட்டுமே களத்தில் வைத்து ஆடியது.
ஆனால், தமிழ் தலைவாஸ் அணியின் அதிரடி ஆட்டத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மொத்தம் 12 வீரர்களை பயன்படுத்தியது யு மும்பா. அந்த அளவுக்கு பதற்றத்தில் இருந்தது அந்த அணி. 12 வீரர்கள் களம் கண்டும் அந்த அணியால் தமிழ் தலைவாஸ் அணியின் புள்ளிகளை தொடக் கூட முடியவில்லை.

இந்தப் போட்டியில் முதல் பாதியிலேயே தமிழ் தலைவாஸ் அணி 27 - 17 என்ற புள்ளிக் கணக்கில் பெரிய முன்னிலையை பெற்றது. இரண்டாம் பாதியில் யு மும்பா தன் கடைசி மூச்சு வரை புள்ளிகளை எடுக்கவும், தமிழ் தலைவாஸ் அணியை ஆல் - அவுட் செய்யவும் முயன்றது. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் 50 - 34 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் ரெய்டுகள் தான் உச்சகட்டமாக இருந்து வெற்றியை தேடித் தந்தது என்றே சொல்லலாம். தடுப்பாட்டம் பாதிக்கு பாதி மட்டுமே சிறப்பாக இருந்தது. அதனால் தான் யு மும்பா அணியால் 34 புள்ளிகள் வரை பெற முடிந்தது. ஆனால், நரேந்தர் மற்றும் அஜின்க்யா பவார் என இரண்டே இரண்டு நட்சத்திர ரெய்டர்களை வைத்து யு மும்பா கதையை முடித்தது தமிழ் தலைவாஸ்.
நரேந்தர் 13 புள்ளிகளும், அஜின்க்யா பவார் 10 புள்ளிகளும் எடுத்தனர். தடுப்பாட்ட வீரர்கள் ஐந்து பேரும் 3, 4, 5 என புள்ளிகளை பெற்று இருந்தனர். கடைசி வரை மாற்று வீரர்களை உள்ளே அழைக்காத தமிழ் தலைவாஸ் அணி 7 வீரர்களை மட்டுமே வைத்து ஆடியது. அந்த 7 வீரர்களின் பங்களிப்பும் அபாரமாக இருந்தது. யு மும்பா அணிக்கு எதிரான இந்த வெற்றி, தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து பெறும் நான்காவது வெற்றி ஆகும். மேலும், புள்ளிப் பட்டியலில் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது.