சென்னை : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, யுபி யுத்தாஸ் அணியை வீழ்த்தியது. ஆனால், இந்த வெற்றியால் எந்த பெரிய ஆரவாரமும் அந்த அணியிடம் இல்லை.
பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்ட தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் தன்னை விட கீழே இருக்கும் யுபி யுத்தாஸ் அணியை 32 - 25 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முக்கிய மாற்றமாக நட்சத்திர ரெய்டர் அஜின்க்யா பவாரை மாற்று வீரராக மட்டுமே பயன்படுத்தியது தமிழ் தலைவாஸ். அவருக்கு பதிலாக விஷால் சாஹல் முக்கிய ரெய்டராக முதலில் களமிறங்கினார்.

இந்தப் போட்டியில் புள்ளிப் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கும் யுபி யுத்தாஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் அடைய வேண்டும் என திட்டம் போட்டு ஆடியது. ஆனால், இறுதியில் 32 - 25 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
ஏற்கனவே, பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்ட தமிழ் தலைவாஸ் அணிக்கும் இது ஆறுதல் வெற்றி தான். அந்த அணி இந்த வெற்றி மூலம் 5 புள்ளிகள் பெற்று, மொத்தம் 45 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
ஆனால், தமிழ் தலைவாஸ் அணி 19 போட்டிகளில் ஆடி எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. தற்போது 5, 6, 7, 9 ஆகிய இடங்களில் இருக்கும் அணிகள் 17 அல்லது 18 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் நிலையில் அந்த அணிகள் 19 போட்டிகளை ஆடி முடிக்கும் போது தமிழ் தலைவாஸ் அணியை விட கூடுதல் புள்ளிகள் பெற வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழ் தலைவாஸ் புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்துக்கு முன்னேறி விட்டது என மகிழ்ச்சி அடையவும் முடியாது.