சென்னை: 2024 புரோ கபடி லீக் தொடரின் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இன்று புனேரி பல்தான் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி மோத உள்ளது. இந்த நிலையில், அந்த அணி முதல் இடத்தை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதுவரை 2024 புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் ஒரு போட்டியில் மட்டுமே ஆடி இருக்கிறது. அதில் அந்த அணி தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. அதிலும் 15 பந்தயப் புள்ளிகள் வித்தியாசத்தில் அந்த அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தி அபாரமாக இந்த சீசனை துவக்கி இருக்கிறது.

அடுத்த நடைபெற உள்ள புனேரி பல்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தமிழ் தலைவாஸ் அணிக்கு 5 புள்ளிகள் கிடைக்கும். அத்துடன் மொத்தமாக 10 புள்ளிகளை பெறும்.
தற்போது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், உபி யுத்தாஸ், புனேரி பல்தான் ஆகிய மூன்று அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டு வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி தனது இரண்டாவது லீக் போட்டியில் வெற்றி பெற்று மொத்தமாக 10 புள்ளிகளை பெற்றால் முதல் மூன்று இடங்களுக்குள் இடம் பெற்று விட முடியும்.
ஆனால், பந்தயப் புள்ளிகளில் வித்தியாசம் அதிகமாக இருந்தால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி தற்போது 35 பந்தயப் புள்ளிகள் வித்தியாசத்துடன் முதல் இடத்தில் உள்ளது. புனேரி பல்தான் அணியை 20 பந்தயப் புள்ளிகளுக்கும் மேற்பட்ட வித்தியாசத்தில் வீழ்த்தினால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.