விசாகப்பட்டினம்: புரோ கபடி லீக் சீசன் 12-ல் புனேரி பல்தான் அணியின் ஆதிக்கப் பயணம் தொடர்கிறது. விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் அணியை 45-36 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வீழ்த்தி, இந்த சீசனில் தங்களது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது புனேரி பல்தான்.
கேப்டன் அஸ்லாம் இனாம்தார் மற்றும் இளம் புயல் ஆதித்யா ஷிண்டேவின் அபாரமான ரெய்டிங், பெங்கால் வீரர் தேவாங்கின் 17 புள்ளிகள் என்ற தனி ஒருவன் போராட்டத்தை வீணடித்தது. போட்டியின் ஆரம்பம் முதலே புனேரி பல்தான் அணி தனது கட்டுப்பாட்டில் ஆட்டத்தை வைத்திருந்தது.

ஆதித்யா ஷிண்டே மற்றும் அஸ்லாம் இனாம்தார் அடுத்தடுத்து ரெய்டுகளில் புள்ளிகளை எடுத்து வந்து, பெங்கால் அணிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். முதல் 10 நிமிடங்களிலேயே, கேப்டன் அஸ்லாம் இனாம்தாரின் ஒரு சூப்பர் ரெய்டு ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அந்த ஒற்றை ரெய்டில் நிதேஷ் குமார், பர்தீக் என இரண்டு முக்கிய வீரர்களை அவர் வெளியேற்றினார்.
அதன்பின், பெங்கால் அணியும் சளைக்காமல் பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் மாறி மாறி ஆல் அவுட்களைக் கொடுத்து அசத்தின. இதனால், முதல் பாதியில் ஆட்டம் மிகுந்த விறுவிறுப்புடன் சென்றது. முதல் பாதியின் முடிவில், புனேரி பல்தான் அணி 26-22 என முன்னிலையில் இருந்தது. பெங்கால் வீரர் தேவாங், முதல் பாதியிலேயே தனது 'சூப்பர் 10'-ஐ பதிவு செய்து மிரட்டினார்.
இரண்டாம் பாதியில் புனேரி பல்தான் அணி முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தியது. ஆதித்யா ஷிண்டே தனது பங்கிற்கு 'சூப்பர் 10'-ஐ பதிவு செய்து அசத்தினார். போட்டியின் 14-வது நிமிடத்தில், விஷால் பரத்வாஜ் தலைமையிலான புனேரி பல்தான் பாதுகாப்புப் படை, பர்தீக்கைப் பிடித்து பெங்கால் அணிக்கு இரண்டாவது முறையாக ஆல் அவுட்டைக் கொடுத்தது. இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
அதன்பிறகு, பங்கஜ் மோஹிதேவும் ரெய்டுகளில் புள்ளிகளை அள்ள, புனேரி அணியின் முன்னிலை வசதியாக உயர்ந்தது. தனி ஒருவனாகப் போராடிய தேவாங்கால், பெங்கால் அணியை தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இறுதியில், புனேரி பல்தான் அணி 45-36 என்ற புள்ளிக்கணக்கில், 9 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது புனேரி பல்தான்.