புனே: புரோ கபடி லீக் தொடரில் பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 42-38 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியின் காரணமாக தமிழ் தலைவாஸ் அணியின் பிளே ஆஃப் கனவும் முடிவுக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்த்து தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது. தமிழ் தலைவாஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், இனி விளையாடும் அத்தனை போட்டிகளிலும் வெல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாழ்வா சாவா ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் களமிறங்கியதால், ரசிகர்களிடையே அதிக ஆர்வம் இருந்தது.

இதன்பின் முதல் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், பாட்னா பைரேட்ஸ் அணி முதல் புள்ளியை பெற்றது. தொடர்ந்து தமிழ் தலைவாஸ் அணியும் புள்ளிகளை பெற, இரு அணிகளும் சரிக்கு சமமாக புள்ளிகளை பெற்று வந்தனர். ஆனால் ஆட்டத்தின் 11வது நிமிடத்திலேயே தமிழ் தலைவாஸ் அணியை பாட்னா வீரர்கள் ஆல் அவுட் செய்தனர். இதனால் 16-9 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் முன்னிலை பெற்றது.
இருப்பினும் சுதாரித்து கொண்ட தமிழ் தலைவாஸ் அணி, அடுத்தடுத்து விரைவாக புள்ளிகளை பெற தொடங்கியது. ஆனாலும் முதல் பாதி ஆட்டம் முடிவில் 20-15 என்ற கணக்கில் பாட்னா அணி முன்னிலையை தக்க வைத்தது. தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டூ ஆர் டை ரெய்டில் புள்ளிகளை கைப்பற்ற, ஆட்டம் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது.
இதன்பின் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா அணியை ஆல் அவுட் செய்ய, ஆட்டம் 35-31 என்ற நிலைக்கு வந்தது. பாட்னா அணி முன்னிலையில் இருந்தாலும் 4 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் என்பதால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு தொற்றி கொண்டது. கடைசி 5 நிமிடத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி நேரத்தை கடத்திய நிலையில், தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகளை எளிதாக விட்டுக் கொடுத்தது.
இறுதியாக ஆட்டம் நேர முடிவில் 42-38 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அணி அபார வெற்றியை பெற்றது. இந்த தோல்வி காரணமாக தமிழ் தலைவாஸ் அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ளது. 18 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 6 வெற்றி, 11 தோல்வி, ஒரு டிரா என்று 39 புள்ளிகளுடன் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இனி எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வென்றால் கூட தமிழ் தலைவாஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது.