புரோ கபடி லீக் - 8 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்ற ஜெய்ப்பூர்.. அனல் பறந்த இறுதி ஆட்டம்
மும்பை : புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் இறுதிப் போட்டி ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியும், புனே அணியும் மோதின.
இந்த தொடரில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜெய்ப்பூர் அணி, 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
புனே அணியில் நட்சத்திர வீரர் அஸ்லாம், மோகித் ஆகியோர் இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை.

சரி சமமான புள்ளி
மும்பையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இரு அணிகளுமே ஆதிக்கம் செலுத்தியது. சொல்லப் போனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே சரி சமமான அளவில் புள்ளிகளை பெற்றனர். ஜெய்ப்பூர் அணியின் அர்ஜூன் போட்டியின் முதல் புள்ளியை போனஸ் லைனை தொட்டது மூலம் பெற்றார்.

புனே ஆல் அவுட்
முதல் பாதியில் முடிவில், புனே அணியில் 2 பேர் மட்டுமே களத்தில் ஆட்டமிழக்காமல் நிற்க ஜெய்ப்பூர் அணி 14க்கு 12 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனையடுத்து ஆட்டத்தின் 2வது பாதியின் தொடக்கத்திலே ஜெய்ப்பூர் ஆதிக்கம் செலுத்தி புனேவை ஆல் அவுட் ஆக்கியது.

ஜெய்ப்பூர் முன்னிலை
இதன் மூலம் 18க்கு13 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணி முன்னிலை பெற்றது. இதனையடுத்து புனே அணி அடுத்தடுத்து 2 புள்ளிகளை பெற்று, புள்ளியின் வித்தியாசத்தை குறைக்க முற்பட்டது. இதனையடுத்து ஜெய்ப்பூர் அணி வீரர் அர்ஜூன் தேஷ்வால் ரெய்ட் சென்று 2 புள்ளிகளை பெற்றார்.

பரபரப்பான கட்டம்
பரபரப்பான இறுதி கட்டத்தில் புனே அணி 2 புள்ளிகள் கிடைக்க, வித்தியாசம் வெறும் 2 புள்ளி அளவில் குறைந்தது. இதனையடுத்து,ஜெய்ப்பூர் வீரர் அஜித்தை புனே அணி வீரர்கள் பிடித்து புள்ளியை பெற்றனர். எனினும் அஜித் போனஸ் லைனை தொட்டதால் அவருக்கு ஒரு புள்ளி கிடைத்தது. ஜெய்ப்பூர் தனது கடைசி ரெய்டில் ஒரு புள்ளியை பெற்றது. இதன் மூலம் ஸ்கோர் 32 க்கு29 என ஆனது.

சாம்பியன் பட்டம்
இதனையடுத்து ஆட்டத்தின் கடைசி ரெய்டில் வந்த புனே அணி புள்ளிகளை பெற முயற்சி செய்தது. ஆனால் அவரை ஜெய்ப்பூர் வீரர்கள் மடக்கி பிடித்தனர். இதன் மூலம் 33க்கு29 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணி வென்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடரின் சிறந்த இளம் வீரர் விருதை தமிழ் தலைவாஸை சேர்ந்த நரேந்தர் வென்றார்.


Click it and Unblock the Notifications