மத்திய, மாநில அரசுகள் கபடி போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்-தமிழக வீராங்கனை மார்ஷல் மேரி

சீனாவில் உள்ள ஷியாங் நகரில் 3வது ஆசிய பீச் கபடி தொடர் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய பெண்கள் கபடி அணி, தாய்லாந்து அணியுடன் மோதியது. இதில் துவக்கம் முதலே அதிக்கம் செலுத்திய இந்திய அணி முதல் பாதியில் 27-12 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது.
அதன்பிறகு 2வது பாதியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி போட்டியின் முடிவில் 54-25 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றிப் பெற்று, தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
இந்திய அணியின் வெற்றிக்கு புள்ளிகள் சேர்ப்பதில் மார்ஷல் மேரி, மமதா, பிரியங்கா நிகி, கவிதா தேவி, ரன்தீப் குர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இதில் மார்ஷல் மேரி தமிழகத்தை சேர்ந்தவர்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள பி.கே.ஆர்.மகளிர் கல்லூரி மாணவியான மார்ஷல் மேரி, சிறந்த தடுப்பாட்ட வீராங்கனை. சீனாவில் இருந்து ஈரோட்டிற்கு வந்த மார்ஷல் மேரிக்கு, அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவியர் மூலம் அவர், ஊர் முழுவதும் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கெளரவப்படுத்தபட்டார்.
அதன்பிறகு மார்ஷல் மேரி கூறியதாவது,
நான் விழுப்புரம் மாவட்டம் சவேரியார்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். எனக்கு 2 அக்காக்கள் உள்ளனர். எனது தந்தை சவேரியப்பன், தாயார் எமில். சிறு வயதில் இருந்தே கபடி போட்டியின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்தது.
பள்ளி மற்றும் கல்லூரி நிலைகளிலான கபடி போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளேன். தேசிய அளவிலான 4 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். கடந்த ஆண்டு தெற்காசிய விளையாட்டு போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தினோம். தற்போது சீனாவில் நடைபெற்ற ஆசிய பீச் கபடி தொடரில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளோம்.
பீச் கபடி போட்டிகளில் விளையாடுவது மிகவும் கடினம். ஆனால் அப்போட்டியில் வெற்றிப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்த அகில இந்திய கபடி சங்கத்தின் இயக்குனர் சபியுல்லா, மாவட்ட இயக்குனர் சுப்பிரமணியன், எனது பயிற்சியாளர்கள் பழனிச்சாமி, அன்பழகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டிக்கு, மற்ற விளையாட்டுகளை போல முக்கியத்துவம் அளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications