மதுரை: மதுரையில் நடைபெற்று வரும் தேசிய பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் கபடி போட்டியில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது.
மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளில் பெண்கள் தடகளம், வாலிபால், கபடி, கைபந்து போட்டிகள் இரவு பகலாக நடக்கிறது.
கபடி போட்டியில் டெல்லி அணி ஆந்திரா அணியை 59:13 புள்ளிகள் கணக்கில் வென்றது.
இமாச்சல பிரதேச அணி கர்நாடகா அணியை 50:27 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது.
ஒரிஸ்ஸா அணி கேரளா அணியை 36:14 புள்ளிகளிலும், குஜராத் அணி கோவா அணியை 55:13 புள்ளிகளிலும் வென்றன.
அதே போல பஞ்சாப் அணி மத்தியப் பிரதேச அணியை 45:34 புள்ளி கணக்கிலும், ராஜஸ்தான் அணி சட்டீஸ்கர் அணியை 54:36 புள்ளிகள் வித்தியாசத்திலும் வென்றன.
தமிழக அணி திரிபுரா அணியை 66:17 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்று முன்னிலை வகிக்கிறது.
அதே போல 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் டெல்லி வீராங்கனை சுஷ்மா வெற்றி பெற்றார்.
இந்த போட்டியில் சுஷ்மா 2 நிமிடம் 9.9 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். 2வது இடத்தை கேரள வீராங்கனை அம்பிகாவு, 3ம் இடத்தை மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரதிமா குருவும் பிடித்தனர்.
ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக வீராங்கனையான கோவையை சேர்ந்த சரஸ்வதி புதிய சாதனை படைத்தார்.
48.94 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த சரஸ்வதி கேரள வீராங்கனை பிரஜிஷாவின் சாதனையை (45.30 மீட்டர்) முறியடித்தார்.
இந்த போட்டியில் 2வது இடமும் தமிழகத்துக்கே கிடைத்தது. இரண்டாவது இடத்தை கோகிலாவும், 3வது இடத்தை ஹரியானாவைச் சேர்ந்த குர்பிரீத்தும் பெற்றனர்.
கைப்பந்து போட்டியில் மேற்கு வங்க அணி 25-6, 25-15 என்ற செட் கணக்கில் திரிபுராவை வென்றது.