கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை அசத்திய தமிழ் தலைவாஸ்
புனே: சரக்கு விலையை உயர்த்தினாலும், பீர் விலையை உயர்த்தாமல் குடிகாரர்கள் வயிற்றில் "கூல்" வார்த்த டாஸ்மாக் போல, தனது கடைசி ஆட்டத்தில் வென்று தமிழ் தலைவாஸ் ஆறுதல் அடைந்துள்ளது.
புரோ கபடி லீக் சீசன் 5 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முதல் முறையாக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கரின் தமிழ் தலைவாஸ் அணி, கடைசி நேர சொதப்பல்களால் பல வெற்றி வாய்ப்புகளை இழந்தது.

புனேயில் நேற்று இரவு நடந்த தனது கடைசி ஆட்டத்தில், தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பட்னா பைரேட்ஸ் அணியை சந்தித்தது.
பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியுள்ள பட்னா பைரேட்ஸ் அணிக்கு துவக்கத்தில் இருந்தே அதிர்ச்சி அளித்தது தமிழ் தலைவாஸ். கேப்டன் அஜய் தாக்குர் 14 புள்ளிகளும், பிரபஞ்சன் 11 புள்ளிகளும் எடுத்து, முன்னிலையை தொடர்ந்து தக்க வைத்தனர்.
முதல் பாதியின் போது 29-12 என்று தமிழ் தலைவாஸ் முன்னிலையில் இருந்தது. பட்னா பைரேட்ஸ் அணியின் பிரதீப் நர்வால், 20 புள்ளிகள்
எடுத்து, தமிழ் தலைவாஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
இரண்டாவது பாதியில் பட்னா பைரேட்ஸ் அணி 25 புள்ளிகளை சேர்த்தது.
அதே நேரத்தில் தமிழ் தலைவாஸ், 11 புள்ளிகள் மட்டுமே சேர்த்தது.
வழக்கம் போல் கடைசி நேரத்தில் சொதப்பினாலும், முதல் பாதியில் பெற்ற முன்னிலை, தமிழ் தலைவாஸ் அணியைக் காப்பாற்றியது. இறுதியில் 40-37 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
22 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி, 6 போட்டிகளில் வெற்றி, 14ல் தோல்வி, 2ல் டை செய்து 46 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
Story first published: Sunday, October 15, 2017, 14:00 [IST]
Other articles published on Oct 15, 2017


Click it and Unblock the Notifications