"முரட்டுக்காளை"யை அடக்கிய "பிக் பாஸ்" தலைவாஸ்!
நாக்பூர்: புரோ கபாடி லீக் போட்டியில், பெங்களூரு அணியுடனான முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு, தமிழ் தலைவாஸ் அணி பழிவாங்கியது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், இந்தத் தொடரின் முதல் வெற்றியை, தமிழ் தலைவாஸ் பதிவு செய்தது.
புரோ கபாடி லீக்கின், 5வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் முறையாக இந்தப் போட்டியில், தமிழகத்தின் சார்பில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் அணியான தமிழ் தலைவாஸ் அணி, இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தது.
முதல் ஆட்டத்தில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் 32-27 என்ற கணக்கிலும், இரண்டாவது ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணியிடம், 32-31 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தது.

நாக்பூர் போட்டி
நாக்பூரில் நேற்று இரவு நடந்த, மூன்றாவது ஆட்டத்தில், மீண்டும் பெங்களூரு புல்ஸ் அணியை சந்தித்தது தமிழ் தலைவாஸ். முதல் போட்டியில் செய்த தவறுகளை இந்தப் போட்டியில் செய்யக் கூடாது என்ற உறுதியுடன், முதல் விநாடி முதலே சரியாக திட்டமிட்டு, பெங்களூரு அணியை கட்டம் கட்டியது தலைவாஸ்.

7வது நிமிடத்தில் சம நிலை
ஆட்டத்தின், 7வது நிமிடத்தில், 3-3 என்ற புள்ளிகளுடன் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. பின்னர், இரு அணிகளும், மாறி மாறி புள்ளிகள் பெற்றன. ஆனால், தமிழ் தலைவாஸ் தொடர்ந்து முன்னிலை இருந்தது.

செவ்வகத்துக்குள் ஓடிய காளை
ஜல்லிக்கட்டு காளையையே அடக்கிய தமிழர்கள், ஒரு செவ்வகத்துக்குள் ஓடும் காளையை கட்டுப்படுத்தி, 29-24 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரில், தலைவாஸ் அணிக்கு கிடைக்கும் முதல் வெற்றி இதுவாகும்.

7 புள்ளிகளுடன் தலைவாஸ்
மொத்தம், 12 அணிகள், இரண்டு பிரிவுகளாக மல்லுக்கட்டும், இந்த சீசனில், குரூப் பி-யில் தமிழ் தலைவாஸ் அணி இடம்பெற்றுள்ளது. பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், தெலுகு டைட்டன்ஸ், பெங்கால் வாரியஸ், யு பி யோதா அணிகளும் இதே பிரிவில் உள்ளன.
பெங்களூரு அணி, 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தலைவாஸ் அணி, 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications