சென்னை: புரோ கபடி லீக்கில், நேற்று நடந்த இரண்டு பரபரப்பான ஆட்டங்களில், முதல் முறையாக இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ள யுபி யோத்தா அபாரமாக வென்றது, தமிழ் தலைவாஸ் அணி வழக்கம்போல், கடைசி நேர பரபரப்பால் தோல்வி அடைந்தது.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த சீசனில் புதிதாக அறிமுகமான யுபி யோத்தா, தமிழ் தலைவாஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் பார்சூன்ஜயன்ஸ்ட் அணிகளையும் சேர்த்து, 12 அணிகள் பங்கேற்கின்றன.

சென்னையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணியும், ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. ஆட்டம் துவங்கிய உடனேயே இரு அணிகளும் புள்ளிகளை எடுக்கத் துவங்கின. 8-6 என்று முன்னிலைப் பெற்ற ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 17-10 என்று முதல் பாதியை நிறைவு செய்தது.
கேப்டன் அஜய் தாக்குர் 13 புள்ளிகள் எடுத்து, அணியின் ஸ்கோரை உயர்த்தி கொண்டே வந்தாலும், தமிழ் தலைவாஸ் அணி எதிரணிக்கு புள்ளிகளை வழங்கியது.
ஒரு நல்ல பரபரப்பான படத்தை எடுத்து விட்டு, அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல் சொதப்புவது போல, கிடைத்த நல்ல வாய்ப்புகளை தமிழ் தலைவாஸ் இழந்தது. கடைசி நேரத்தில் 27-26 என்ற கணக்கில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வென்றது.
மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில், புனேரி பல்தான் அணிக்கு சரியான போட்டியைக் கொடுத்தாலும், 34-33 என்ற கணக்கில் யுபி யோத்தா தோல்வியடைந்தது.
இன்று நடக்கும் ஆட்டங்களில் யு மும்பாவை தமிழ் தலைவாஸ் சந்திக்கிறது. பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி மோதுகிறது.