மும்பை: புரோ கபடி லீக் தொடரில் யு மும்பா அணிக்கு எதிரான போட்டியில் 35-22 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. தொடர்ச்சியாக 4வது தோல்வியை தமிழ் தலைவாஸ் சந்தித்திருப்பதால், ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புரோ கபடி லீக் தொடரின் 10வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இந்த நிலையில் 11வது சீசனிலும் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை அளித்துள்ளது.

பெங்களூர் புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், டபாங் டெல்லி உள்ளிட்ட அ?அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த தமிழ் தலைவாஸ் அணி, நேற்றிரவு யு மும்பா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் விரைவாக புள்ளிகளை பெற்றதோடு, சரிக்கு சமமாக போட்டிபோட்டனர். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு எகிறியது.
தமிழ் தலைவாஸ் அணியில் சச்சின் மற்றும் நரேந்தர் இருவருக்கும் எதிர்பார்த்த அளவிற்கு ரெய்டில் புள்ளிகளை கிடைக்கவில்லை. ஆனால் யு மும்பா அணியின் நட்சத்திர வீரரான ஆஷு மாலிக் 12 புள்ளிகளை ரெய்டில் பெற்றார். இறுதியாக யு மும்பா அணி 35-32 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
கடந்த சீசன்களை போல் இந்த சீசனில் யு மும்பா அணி வலிமையான அணியாக இல்லை. ஆனால் தமிழ் தலைவாஸ் வீரர்களின் ஆட்டம் அந்த அணியை அதிக வலிமை உள்ள அணியாக காட்டி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தோல்வி காரணமாக தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
9 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றி, ஒரு டிரா மற்றும் 5 தோல்வி என்று 22 புள்ளிகளுடன் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்ததாக பெங்கால் வாரியர்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் தமிழ் தலைவாஸ் அணியின் பாடு திண்டாட்டம் தான்.