டெல்லி: வழக்கமாக கடைசி நேர பதற்றத்தில் சொதப்பும் தமிழ் தலைவாஸ் அணி, வெற்றி பெறாது என்ற நினைத்த நிலையில், அதிரடி ஆக் ஷன் ஹூரோவாக மாறி, குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணியை அடித்து தூள் கிளப்பி வென்றது.
புரோ கபடி லீக் சீசன் 5ன் 94வது போட்டி டெல்லியில் நேற்று இரவு நடந்தது. இதில், ஏ பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணியும், பி பிரிவில், கடைசி இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணியும் மோதின.

இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 3ல் மட்டுமே சச்சின் டெண்டுல்கரின் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றிருந்தது. துவக்கத்தில் புள்ளிகள் எடுத்து, மற்ற அணிகளுக்கு சவால் விட்டாலும், கடைசி நேர சொதப்பல்களால் தோல்வியையே சந்தித்து வந்தது.
இந்த நிலையில், பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் பெற்ற வெற்றியுடன் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் தெம்பாக களமிறங்கியது.
ஆட்டத்தின் முதல் சில நிமிடங்களில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தன. 4-வது நிமிடத்தில் பிரபஞ்சன் ரெய்டு மூலம் கிடைத்த புள்ளிகளால், 5-3 என தமிழ் தலைவாஸ் முன்னிலை பெற்றது. சச்சின் மூலம், 6-5 என, குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணி முன்னிலை பெற்றது. அதன்பிறகு, அந்த அணியை பிடிக்க முடியவில்லை. 13-6 என முன்னிலை பெற்ற குஜராத் பார்சூன்ஜயன்ஸ்ட் அணி, முதல் பாதியின் இறுதியில், 20-13 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி துவங்கியதுமே, குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணி அதிரடியில் இறங்கியது. 23-13, 27-15, 30-20 என்று தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.
அவ்வளவுதான் தமிழ் தலைவாஸ் அணி காலி என்று நினைத்த நேரத்தில், தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்குர் திடீரென அதிரடியில் இறங்கினார். அவருக்கு பிரபஞ்சன் கை கொடுத்தார். 34-28 என முன்னிலையை குறைத்தனர். பின்னர் 34-31 என்று வித்தியாசத்தை குறைத்தனர்.
ஆட்டம் முடிவடைய சில நிமிடங்களே இருந்த நிலையி்ல், 35-34 என்று ஒரு புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அபாரமாக வென்றது. இது தமிழ் தலைவாஸ் அணிக்கு கிடைத்துள்ள 4வது வெற்றியாகும்.