சென்னை: சென்னையில் நேற்று இரவு நடந்த புரோ கபடி லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணியை 33-20 என்ற கணக்கில் புனேரி பல்தான் மிக சுலபமாக வென்றது.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னையில் அடுத்தக் கட்ட ஆட்டங்கள் நேற்று இரவு துவங்கின.
முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், புனேரி பல்தான் அணியும் மோதின. ஆட்டத்தின் துவக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக விளையாடியது. புனேரி பல்தான் அணி புள்ளிகள் பெற்றாலும், தமிழ் தலைவாஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. முதல் பாதியின் முடிவில் தமிழ் தலைவாஸ் 12-11 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் துவக்கத்தில் இருந்தே, புனேரி பல்தான் அணி அட்டகாசமாக விளையாடியது. ஆயுத பூஜைக்கு பொறி, கடலை வாங்குவதற்கு அவசரமாக போக வேண்டும் என்பது போல், தமிழ் தலைவாஸ் அணி போனோம் அவுட்டானோம் என்று சொதப்ப துவங்கியது.
முதல் பாதியில் 12 புள்ளிகளை எடுத்த தமிழ் தலைவாஸ், இரண்டாவது பாதியில் 8 புள்ளிகளை மட்டுமே சேர்த்தது. அதே நேரத்தில், முதல் பாதியில் 11 புள்ளிகளை எடுத்த புனேரி பல்தான் அணி இரண்டாவது பாதியில் 22 புள்ளிகளை சேர்த்தது.
ஒரு கட்டுரையால், பாஜவில் மிகப் பெரிய கலக்கத்தை ஏற்படுத்திய யஷ்வந்த் சின்ஹா போல, தமிழ் தலைவாஸ் அணியை கலங்கடித்தது புனேரி பல்தான்.
இறுதியில் 33-20 என்ற கணக்கில் அந்த அணி வென்றது. புனேரி பல்தான் 13 போட்டிகளில், 52 புள்ளிகளுடன் ஏ பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி, 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வென்று, 32 புள்ளிகளுடன் பி பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.
நேற்று இரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்சூன்ஜயன்ஸ்ட் அணி 30-29 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வென்றது.
இன்று நடக்கும் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணி ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்தான், யுபி யோத்தா அணிகள் மோதுகின்றன.