நாக்பூர்: 5வது புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ் அணியை இன்று தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் முதல் வெற்றியைத் தமிழ் தலைவாஸ் பெற்று வெற்றிக் கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அளவில் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் 5வது புரோ கபடி லீக் போட்டி இந்திய நகரங்களில் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சிடம் 27-32 என்ற புள்ளி கணக்கில் தோற்றது. பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி ஆட்டம் தோல்வியில் முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.
இந்நிலையில், இன்று தமிழ் தலைவாஸ் தனது 2-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது. நாக்பூரில் இப்போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இதில் வென்று முதல் வெற்றியைப் பெறும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் உள்ளனர்.
இரவு 9 மணிக்கு புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஹைதராபாத்தில் நேற்றிரவு நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 43-36 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது.