சென்னை: தனது 100வது புரோ கபடி போட்டியில் ஆடிய தெலுகு டைட்டன்ஸ் அணியின் பாரத் ஹூடா மறக்க முடியாத சரித்திர நிகழ்வை செய்தார். சென்னை எஸ்.டி.ஏ.டி அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில், தெலுகு டைட்டன்ஸ் அணி 46-29 என்ற புள்ளிக் கணக்கில், கடந்த ஆண்டு சாம்பியனான ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை 17 புள்ளிகள் வித்தியாசத்தில் ஊதித் தள்ளியது. பாரத் ஹூடாவின் ஆல்-ரவுண்ட் சரவெடி ஆட்டத்தால், தெலுகு டைட்டன்ஸ் இந்த பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
இந்தப் போட்டியின் ஒரே நாயகன், தெலுகு டைட்டன்ஸ் அணியின் பாரத் ஹூடா தான். தனது 100வது புரோ கபடி போட்டியை ஒரு மாஸ்டர்கிளாஸ் ஆட்டமாக மாற்றிய அவர், 16 ரெய்டு புள்ளிகள் மற்றும் 4 டேக்கிள் புள்ளிகள் என மொத்தம் 20 புள்ளிகளைப் பெற்று, தனி ஒருவனாக ஹரியானா அணியின் கோட்டையைச் சிதைத்தார். அவருக்கு உறுதுணையாக விஜய் மாலிக்கும் 8 புள்ளிகளைப் பெற்று அசத்தினார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே தெலுகு டைட்டன்ஸ் அணி மின்னல் வேகத்தில் புள்ளிகளைக் குவித்தது. பாரத் ஹூடாவின் மல்டி-பாயிண்ட் ரெய்டும், விஜய் மாலிக்கின் ரெய்டும், டைட்டன்ஸ் அணிக்கு 6-0 என்ற வலுவான தொடக்கத்தைக் கொடுத்தது. டைட்டன்ஸ் அணி ஹரியானா அணியை விரைவிலேயே முதல் 'ஆல்-அவுட்' ஆக்கியது.

ஆனால், சாம்பியனான ஹரியானா ஸ்டீலர்ஸ் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கவில்லை. மயங்க் சைனியின் ஒரு சூப்பர் ரெய்டும், ராகுல் அஹ்ரியின் ஒரு சூப்பர் டேக்கிளும், ஹரியானா அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. ஹரியானா அணி ஒரு 'ஆல்-அவுட்'டை நிகழ்த்தி, புள்ளி வித்தியாசத்தை இரண்டாகக் குறைத்து டைட்டன்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
ஹரியானா அணி மீண்டு வருவதாகத் தெரிந்த நொடியில், மீண்டும் தனது விஸ்வரூபத்தைக் காட்டினார் பாரத் ஹூடா. ஒரு முக்கியமான 'டூ-ஆர்-டை' ரெய்டில் வெற்றி பெற்று, தனது 'சூப்பர் 10'-ஐ நிறைவு செய்தார். ரெய்டில் மட்டுமல்லாமல், தடுப்பாட்டத்திலும் கலக்கினார். முதல் பாதியின் இறுதி நொடியில், தெலுகு டைட்டன்ஸ் அணி இரண்டாவது முறையாக ஹரியானாவை 'ஆல்-அவுட்' செய்ய முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார் பாரத் ஹூடா. இதனால், முதல் பாதி முடிவில் தெலுகு டைட்டன்ஸ் அணி 26-16 என பத்து புள்ளிகள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியிலும் தனது அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்த தெலுகு டைட்டன்ஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸை மூச்சுத் திணற வைத்தது. விஜய் மாலிக் தொடர்ந்து புள்ளிகளைக் குவிக்க, பாரத் ஹூடா தனது ஆதிக்கத்தைச் செலுத்த, டைட்டன்ஸ் அணியின் முன்னிலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
தெலுகு டைட்டன்ஸ் அணி மூன்றாவது முறையாக ஹரியானாவை 'ஆல்-அவுட்' ஆக்கியபோது, போட்டியின் முடிவு கிட்டத்தட்ட உறுதியானது. இந்த அபார வெற்றியின் மூலம், தெலுகு டைட்டன்ஸ் அணி தனது ஐந்தாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மறுபுறம், கடந்த ஆண்டு சாம்பியனான ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, தங்களது ஐந்தாவது தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது.